இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் இன்று அதிர்ச்சி அளிக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த டெக் ஊழியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதிலும் இருக்கும் டெக் மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு டெக் மற்றும் ஐடி ஊழியர்களையும் பயமுறுத்திய நிலையில் இந்திய ஐடி சேவைத் துறையைப் பாதிக்குமா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது.
இன்போசிஸ்
இன்போசிஸ் தற்போது பணியில் இருக்கும் ஐடி ஊழியர்களைப் பாதிக்காது என்றாலும் ரெசிஷன் மற்றும் ஐடி துறையில் இருக்கும் மந்தநிலையின் எதிரொலியாகவே இன்போசிஸ் நிறுவனத்தின் 600 பேரின் பணிநீக்கம் பார்க்கப்படுகிறது.
பிரஷ்ஷர் ஊழியர்கள்
இன்போசிஸ் நிறுவனம் ஒவ்வொரு காலாண்டிலும் எந்த அளவிற்கு அனுபவம் வாய்ந்த ஊழியர்களைச் சேர்க்கிறதோ, அதை விட அதிகமாகப் பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்கிறது. அப்படி இன்போசிஸ் நிறுவனத்தில் பணியில் கல்லூரியில் பட்டம் பெற்று நேரடியாகப் பிரஷ்ஷர் ஆகச் சேருவோருக்கு சில மாத பயிற்சிக்கு பின்பு Fresher Assessment (FA) டெஸ்ட் வைக்கப்படும், இந்தத் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
600 பிரஷ்ஷர்கள் பணிநீக்கம்
அந்த வகையில் தற்போது இன்போசிஸ் சுமார் 600 பிரஷ்ஷர்களை இந்தத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது பொதுவாக ஒவ்வொரு வருடமும் நடப்பது தானே என்று கூறினாலும் எண்ணிக்கை அளவில் மிகவும் அதிகம். சமீபத்தில் விப்ரோ நிறுவனம் கூட இதுப்போன்ற அறிவிப்பை வெளியிட்டது.
SAP ABAP தொழில்நுட்பம்
இன்போசிஸ் நிறுவனத்தில் பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்ட பிரஷ்ஷர் ஒருவர் கூறுகையில் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்போசிஸ் பணியில் சேர்ந்தோம் SAP ABAP தொழில்நுட்பத்தில் பயிற்சி கொடுத்தார்கள், 150 பேர் கொண்ட அணியில் 60 பேர் மட்டுமே Fresher Assessment (FA) டெஸ்ட்-ல் தேர்வான நிலையில் மற்ற அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஜூலை 2022 பிரஷ்ஷர்கள்
இதேபோல் ஜூலை 2022ல் சேர்ந்த பேட்சில் 150 பேர் இருந்த நிலையில் இதில் 85 பேர் தேர்ச்சி அடையாத காரணத்தால் 2 வாரம் நோட்டீஸ் கொடுத்துப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இன்போசிஸ் விளக்கம்
இதேபோல் கடந்த வாரம் சுமார் 208 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் சுமார் 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் இன்போசிஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரையில் வெளியிடவில்லை.
விப்ரோ
விப்ரோ கொடுத்த விளக்கத்தின் படி நிறுவனத்தின் பணியில் சேர்க்க ஆஃபர் லெட்டர் கொடுக்கப்பட்ட நிலையிலும், பணியில் சேர்க்கப்படாமல் இருக்கும் 452 பிரஷ்ஷர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. ஆஃபர் லெட்டர் பெற்ற பிரஷ்ஷர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுத் தேர்வுகள் மூலம் ஆய்வு செய்தபோது தொடர்ந்து குறைவான மதிப்பீட்டைப் பெற்று வந்த காரணத்தால் பணியில் சேர்க்கும் முன்பே 452 பேருக்கான ஆஃபர் லெட்டர் திரும்பப் பெறப்பட்டு உள்ளது.