இன்ஃபோசிஸ் நிறுவனம் டிஜிட்டல், கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சைன்ஸ் ஆகியவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களை கொண்டு நிறைவான பணிகளைச் செய்துள்ளதால், சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் போனஸ் போன்றவற்றை அதிகம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
எவ்வளவு சம்பள உயர்வு?
இந்தியாவில் உள்ள தங்களது ஊழியர்களுக்குச் சராசரியாக 12 முதல் 13 சதவிகித சம்பள உயர்வு வழங்க இன்போசிஸ் திட்டமிட்டுள்ளது. அதிக திறன் கொண்ட ஊழியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் சம்பள உயர்வுடன் போனஸ் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பயிற்சி
மேலும் நிறுவனத்தின் சிறந்த ஊழியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லர்னிங் பிரிவில் பயிற்சி வழங்கி பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
மார்ச் மாத இறுதி நிலவரப்படி 3,14,015 ஊழியர்களுடன் இன்ஃபோசிஸ் இயங்கி வருகிறது. இன்போசிஸ் உள்ளிட்ட இந்திய ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் வெளியேறுவது அதிகம் இருந்தது. அதை கட்டுப்படுத்த ஊழியர்கள் வெளியேறாமல் இருக்க சம்பள உயர்வைத் தாண்டி பணியாளர்களுக்கு வெவ்வேறு குழுக்களில் பணிபுரியவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லர்னிங் போன்ற தேவைக்கேற்ப திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று மேலாளர்கள் மூலம் உறுதி அளித்துள்ளது இன்போசிஸ்.
டிஜிட்டல் தேவை அதிகரிப்பு
கொரோனா தொற்று அதிகரித்த பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தேவை அதிகரித்து வருகிறது. எனவே தொழில்நுட்ப ஊழியர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் தேவை, அதிக சம்பளம், சிறந்த பதவி மற்றும் பங்கு வெகுமதிகள் போன்றவை ஊழியர்கள் நிறுவனம் மாற தூண்டுவதாகக் கூறுகின்றனர்.
ஊழியர்கள் வெளியேற்ற எண்ணிக்கை
சென்ற ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற எண்ணிக்கை 10.9 சதவீதமாக இருந்தது. அதுவே இந்த ஆண்டு 27.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் வெளியேற்றம் எண்ணிக்கை 17.4 சதவீதமாக உள்ளது. விப்ரோவில் 23.8 சதவீதமாக உள்ளது. ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஊழியர்கள் வெளியேற்றம் எண்ணிக்கை 21.9 சதவீதமாக உள்ளது.
ஃப்ரெஷர்களுக்கு ஜாக்பாட்
சென்ற ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் 85,000 ஃப்ரெஷர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த ஆண்டும் 50 ஆயிரம் நபர்களை பணிக்கு எடுக்கும் என கூறப்படுகிறது.