உலகம் முழுவதுமே டெக் மற்றும் ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மீண்டும் கையில் எடுக்க தொடங்கி இருக்கின்றன. அமேசான் நிறுவனம் 14000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடிய அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடப் போகிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய நிறுவன செயல்பாடுகளையும் மறுக்கட்டமைப்பு செய்ய தொடங்கிவிட்டன. இதன் காரணமாக ஜூனியர் மற்றும் மிடில் லெவல் ஊழியர்களுக்கான தேவை என்பது குறைந்து வருகிறது. ஏனெனில் அந்த வேலைகளை நிறுவனங்கள் ஏஐ வசம் ஒப்படைத்த வண்ணம் இருக்கின்றன.

இந்த பணி நீக்கங்களால் தற்போது ஐடி மற்றும் கணினி அறிவியல் பிரிவில் கல்லூரி படிப்பை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது எட்டாக்கனியாக மாறிவிடுமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருப்பவர்கள் பணிநீக்கம் செய்கிறார்களே, புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பார்களா என்ற அச்சம் ஏற்பட தொடங்கி இருக்கிறது.
ந்த சூழலில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் மிக முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது. 2027ஆம் நிதியாண்டில் பட்டதாரிகள் 20,000 பேரை புதிதாக வேலைக்கு எடுப்போம் என இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பல்வேறு நிறுவனங்களும் பணிநீக்கம் குறித்து அறிவிப்பை வெளியிடும் நிலையில் இன்போசிஸ் நிறுவனம் வேலைக்கு எடுப்போம் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்று பேசிய இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக், இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார். 2026 ஆம் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டில் ஏற்கனவே தங்களுடைய நிறுவனம் 18,000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு தந்திருப்பதாக கூறி இருக்கிறார். டிசம்பர் மாதத்தில் புதிதாக தங்கள் நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் 2026 ஆம் நிதி ஆண்டு முடிவதற்குள் தங்கள் நிறுவனத்தில் 20,000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். 2027 ஆம் ஆண்டிலும் இதையே தொடர்வோம் என அவர் கூறியிருக்கிறார்.
ஏஐ தொழில்நுட்பம் டெக் மற்றும் ஐடி நிறுவனங்கள் செயல்படும் விதத்தை மாற்ற அமைத்து இருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் பெரும்பாலான தங்களுடைய வாடிக்கையாளர்கள் ஏஐ ஏஜெண்டுகளை தயாரித்து வழங்குமாறு கேட்கிறார்கள் அதற்கு ஏற்ற வகையில் எங்களுடைய பணிகளை நாங்கள் மாற்றி வருகிறோம் எனக் கூறியிருக்கிறார்.
ஏஐ மற்றும் மனிதர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்கத் தொடங்கி இருக்கிறது ஐடி துறை, இந்த ஒருங்கிணைப்பில் நாம் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறோம் படிப்படியாக கற்றுக் கொண்டுதான் இதில் அடுத்த கட்டத்துக்கு செல்ல போகிறோம் என கூறி இருக்கிறார். இனி வேலை செய்யும் இடம் என்பது ஏஐ மற்றும் மனிதர்கள் கலந்த இடமாகவே இருக்கும் அந்த மாற்றம் ஏற்பட தொடங்கிவிட்டது என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications