இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் புதன்கிழமை மிகவும் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் சுமார் 25,000 பேர் கல்லூரிகளில் இருந்து நேரடியாகத் தேர்வு செய்து நேரடியாகப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
இதேபோல் இன்போசிஸ் நிறுவனமும் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
25,000 பேருக்கு வேலை - இன்போசிஸ்
இதில் முக்கியமாக 24,000 பட்டம் பெற்ற மாணவர்களை இந்திய அலுவலகங்களிலும், 1000 பட்டம் பெற்ற மாணவர்களை வெளிநாடுகளில் இருக்கும் அலுவலகங்களில் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது இன்போசிஸ்.
மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு
கடந்த நிதியாண்டில் 21,000 மாணவர்களைக் கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் நேரடியாகப் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில் தற்போது 25,000 பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது இன்போசிஸ்.
டிசிஎஸ் சூப்பர் அறிவிப்பு
இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான டிசிஎஸ் இந்த ஆண்டுச் சுமார் 40,000 மாணவர்களை நேரடியாகப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 5 லட்சம் என்ற மாபெரும் இலக்கை தாண்டும் என்று தெரிவித்துள்ளது.
5 லட்சம் ஊழியர்கள்
மார்ச் 31 முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 4,88,469 ஆக இருந்தது, தற்போது ஐடி சந்தையில் இருக்கும் டாப் நிறுவனங்களில் ஊழியர்கள் வெளியேறும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தால் 40,000 பேரை பணியில் சேர்ப்பது மூலம் 5 லட்சம் இலக்கை அடைய முடியும் என டிசிஎஸ் நம்புகிறது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் தனது வர்த்தகத்தில் ஆட்டோமேஷன் சேவை அதிகரிக்க முடிவு செய்தது. இதன் வாயிலாக இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைப் பெற்றது.
ஊழியர்களுக்கு டிமாண்ட்
இதேவேளையில் இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிகளவிலான டிமாண்ட் உருவாகியுள்ள காரணத்தால் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்குச் செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
Attrition Rate அதிகரிப்பு
இதனால் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் Attrition Rate மிகவும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இதைச் சமாளிக்கவும், ஊழியர்கள் வெளியேற்றத்தைத் தடுக்க அதிகளவில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றை அளித்து வருகிறது. ஆனாலும் ஊழியர்கள் வெளியேற்றத்தை ஐடி நிறுவனங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.