உலகத்தையே கொரோனா வைரஸும், அதை விட கொரோனா பயமும் ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது.
இந்த கொரோனாவுக்கு பயப்படாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம். இந்த கொரோனா பரவலைத் தடுக்க பல அரசும் பயங்கரமாக முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதனால் பல்வேறு அலுவலகங்கள், வழக்கம் போல இயங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றன. இந்த சிக்கல் தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கும் வந்து இருக்கிறது.
இன்ஃபோசிஸ்
இந்தியாவின் மிகப் பெரிய மென் பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், கர்நாடகாவின் பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமாராக 2.4 லட்சம் பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் தான் அந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
நோயாளி
மார்ச் 14, 2020, சனிக்கிழமை, பெங்களூரில் இருக்கும் ஒரு சாட்டிலைட் இன்ஃபோசிஸ் அலுவலகத்தை முழுமையாக காலி செய்வதாகச் சொல்லி இருக்கிறது இன்ஃபோசிஸ் தரப்பு. உலகின் பல நாடுகளில் பயங்கரமாக பரவிக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸால் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் பாதிக்கப்படக் கூடாது என அந்தக் கட்டடத்தை காலி செய்து இருக்கிறார்களாம்.
ஊழியர்
அதோடு, இன்ஃபோசிஸ் ஊழியர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்த விவரம் தெரிய வந்து இருக்கிறது. எனவே தான் உடனடியாக முழு கட்டடத்தையும் காலி செய்து இருக்கிறது இன்ஃபோசிஸ் நிறுவனம்.
வீட்டில் இருந்து வேலை
அனைத்து ஊழியர்களையும் வீட்டில் இருந்தே வேலை பார்க்கச் சொல்லி இருக்கிறது இன்ஃபோசிஸ். ஊழியர்கள் அலுவலகத்துக்கு வராததால், இன்ஃபோசிஸ் வாடிக்கையாளர்களுக்கு செய்யப்படும் டெலிவரிகளில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் சொல்லி இருக்கிறது இன்ஃபோசிஸ். அதோடு தன் கட்டடத்தை முழுமையாக தொற்று இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறார்களாம்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் மொத்தம் 83 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் 6 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் இறந்து போயிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்று சரியாகும் இந்த கொரோனா வைரஸ்..?