இந்தியாவின் முன்னணி ஐடி கம்பெனிகளில் ஒன்றான இன்ஃபோசிஸ், வரலாறு காணாத அளவுக்கு ஒரு பெரிய சாதனையை படைத்து இருப்பது போலவே செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த செய்தியின் விளைவாக, இன்ஃபோசிஸ் கம்பெனி பங்குகளின் விலை, பற்ற வைத்த ராக்கெட் போல உயர்ந்து கொண்டே இருக்கிறது.
அப்படி என்ன சாதனை படைத்து இருக்கிறார்கள்? அது எவ்வளவு பெரிய டீல்? டீலின் மதிப்பு என்ன? யார் எல்லாம் இந்த டீலைப் பெற போட்டிக்கு வந்தார்கள்? வாருங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இந்தக் கட்டுரையில் பர்ப்போம்.
எந்த கம்பெனி
வான்கார்ட் (Vanguard) என்கிற கம்பெனியிடம் இருந்து தான் இன்ஃபோசிஸ் இந்த 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டீலைப் பெற்று இருக்கிறது எனச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த டீலின் மதிப்பு என்ன என்பதை இன்ஃபோசிஸ் இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இந்த வான்கார்ட் ஒரு முதலீட்டு நிறுவனம். வான்கார்ட் தன் ஃபண்டுகள் வழியாக இன்ஃபோசிஸ் கம்பெனியில் 3% பங்குகளை வைத்து இருக்கிறதாம்.
இன்ஃபோசிஸ் பங்கு விலை
இந்த டீலைப் பற்றிய செய்திகள் வெளியானதால், கடந்த வாரத்தின், புதன் மற்றும் வியாழக் கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டும், இன்ஃபோசிஸ் பங்கின் விலை சுமாராக 150 ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது. ஆக இன்ஃபோசிஸ் முதலீட்டாளர்கள் இந்த டீலை அத்தனை மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார்கள் போலிருக்கிறதே.
அதிசயம் தான்
இந்திய ஐடி கம்பெனிகளுக்கு மில்லியன் கணக்கில் டீல் முடிப்பது எல்லாம் சாதாரணம் தான். ஆனால் பில்லியன் கணக்கில் டீல் முடிப்பது அரிதிலும் அரிதான நிகழ்வாம். இதை விட இன்னொரு முக்கியமான விஷயம், இந்த டீலில் டீசிஎஸ், விப்ரோ மற்றும் அக்செஞ்சர் போன்ற முன்னனி கம்பெனிகளும் போட்டி போட்டார்களாம். ஆனால் கடைசியில் இன்ஃபோசிஸ் தான் வார்கார்ட் டீலை வென்று இருக்கிறார்கள்.
3000 பேருக்கு இட வசதி
இந்த வான்கார்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்ற டீலை செயல்படுத்த மட்டுமே தனியாக, பெங்களூர் நகரத்தில், எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் 3,000 பேர் வேலை பார்க்கக் கூடிய பெசிலிட்டியை உருவாக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இன்ஃபோசிஸ் 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான டீல்களை பெற்று இருக்கிறதாம். வான்கார்ட் டீல் அந்தப் பட்டியலில் கிடையாது என்பதை மட்டும் இன்ஃபோசிஸ் தெளிவு படுத்தி இருக்கிறது.