இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் ஒரே மகள் தான் ஈஷா அம்பானி. இவருடைய பெயரை சொன்னவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது அவருடைய பிரம்மாண்டத் திருமணம். கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி அன்று ஈஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் வெகுவிமர்சையாக திருமணம் நடந்தது. முகேஷ் அம்பானியின் "ஆன்டிலியா" இல்லத்தில் நடைபெற்ற இந்தத் திருமண விழா ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
மணவிழாவில் உலகப் புகழ்பெற்ற பாப் சிங்கரான பியான்சேயின் இசை நிகழ்ச்சி அரங்கேறியது. விருந்தினரின் பட்டியலை கேட்டால் இன்னும் வியப்பாக இருக்கும். ஹிலாரி கிளிண்டன், ஜான் கெர்ரி, சவுதியின் ஆயில் மினிஸ்டர் காலித் காலித் அல்-ஃபாலிஹ், தனியார் பங்கு முதலீட்டாளர்களான ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன் மற்றும் ஹென்றி கிராவிஸ் ஆகியோருடன் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள், உலகெங்கிலும் உள்ள விஐபிகள் திருமண விழாவில் சங்கமித்தனர்.
திருமணக் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் அந்த புதுமண தம்பதியின் இல்லத்தின் மீது திரும்பியது. முகேஷ் அம்பானியின் இல்லம் ஆன்டிலியா என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் குடியேறிய புது வீடு தான் "குலிதா மாளிகை". அரபிக் கடலை அலங்கரிக்கும் வகையில் சுமார் 50,000 சதுர அடியில் அழகாக அமைந்திருக்கிறது இந்த வீடு, தற்போதைய நவீன கட்டிடக்கலை, சிறப்பான வடிவமைப்பு, அதோடு லக்ஸரிக்கு பஞ்சமில்லாத அனைத்து வசதிகளும் இந்த மாளிகையில் இருக்கிறது.

மாமனார் மாமியார் கொடுத்த அன்புப் பரிசு: மும்பையின் வோர்லி பகுதியில் அமைந்துள்ளது இந்த எழில் மிகு வீடு. மன்னர் காலத்து அரண்மனைகளை போலவே சிறப்பாகவும், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த வீட்டில் எல்லா வசதியும் இருக்கிறது. இந்த வீட்டை ஆனந்த் பிரமலின் பெற்றோர்களான சுவாதி மற்றும் அஜய் பிரமல் 2018-ஆம் ஆண்டில் தங்களுடைய மருமகளான ஈஷா அம்பானிக்கும், மகன் ஆனந்துக்கும் பரிசாக வழங்கினர்.
திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு அனைத்து ஊடகங்களின் பார்வையும் ஈஷாவின் மாமனார் மற்றும் மாமியார் கொடுத்த மெகா கிஃப்டின் பக்கம் திரும்பியது. 2012-ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திடமிருந்து ரூ. 450 கோடிக்கு குலிதா மாளிகையை ஆனந்த் பெற்றோர் வாங்கியுள்ளனர். ஆனால் தற்போது இதன் மதிப்பை கேட்டால் தலை சுற்றும். ரியல் எஸ்டேட் அதிகரிப்பிற்குப் பிறகு ரூ.818 கோடியாக குலிதா மாளிகையின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த மாளிகையை லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற எக்கர்ஸ்லி ஓ'கல்லகன் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
குலிதா மாளிகை முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஒட்டுமொத்த வடிவமைப்புமே வைரத்தை நினைவுபடுத்துமாம். அதிலும் பிரத்தியேகமாக "டைமண்ட் ரூம்" என்ற ஒரு ரூமும் இந்த மாளிகையில் உள்ளது. இந்தியாவின் வேறு எந்த வீட்டிலும் இல்லாத மற்றொரு சிறப்பம்சம் இந்த ரூம். இதில் மன அமைதிக்காக ஒரு கோவிலும் கட்டப்பட்டுள்ளது. திறந்தவெளியில் நீச்சல் குளம், டைனிங் ரூம்கள் பிரமாண்ட வரவேற்பு கூடம், வீட்டைச் சுற்றி புல் வெளித் தோட்டம் என சகல வசதிகளும் நிறைந்துள்ளன.


Click it and Unblock the Notifications