அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் ஈரான் பாதியிலேயே வெளியேறியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு ஈரானும் பதிலடி தந்தது. கிட்டதட்ட 3 மாதங்களுக்கு மேலாக நீடித்த ஈரான் போரால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலைகள் உயர்வு கண்டன. இந்நிலையில் நல்ல செய்தியாக ஈரானும் அமெரிக்காவும் போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு போரை கைவிடுவதாக அறிவித்தன.

ஈரான் போர் முடிவுக்கு வந்ததால் கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியது. ஹார்முஸ் ஜலசந்தியிலும் கச்சா எண்ணெய் போக்குவரத்து தொடங்கியது. இதற்கிடையே சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் ஈரான் பாதியிலேயே வெளியேறியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்தியஸ்தர்கள் ஈரானை சமாதானப்படுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்தவும், ஈரானின் அணுசக்தி திட்டம், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்தல் மற்றும் லெபனானில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதுமே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.
அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் இதில் பங்கேற்றிருந்தார். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் எச்சரித்தார். இது பேச்சுவார்த்தையில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ஈரான் பேச்சுவார்த்தையில் பாதியில் இருந்தே வெளியேறியது.
இத்தனை சவால்களுக்கு மத்தியிலும், கத்தார் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் மத்தியஸ்தத்துடன் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. லெபனானில் போர் நிறுத்தத்தை உறுதி செய்ய ஒரு "மோதல் தவிர்ப்பு பிரிவை" உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும், அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்ட ஒரு வரைபடத்தை உருவாக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் தடையில்லா கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது குறித்து தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
பல தடங்கல்களுக்கு மத்தியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் திங்கள்கிழமை அதிகாலையுடன் முடிவடைந்தாலும், தொழில்நுட்ப ரீதியிலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் சுவிட்சர்லாந்தில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பரஸ்பர நம்பிக்கையின்மை மற்றும் டிரம்ப்பின் கடுமையான எச்சரிக்கைகளுக்கு இடையிலும், இரு நாடுகளும் ஒரு நீண்டகால அமைதி ஒப்பந்தத்தை நோக்கிய முயற்சியில் இறங்கியுள்ளன. இருப்பினும், லெபனானில் நீடிக்கும் மோதல்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஒரு முக்கிய தடையாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

