நொய்டா: இந்தியாவின் உயரமான கட்டடத்தை அமைத்து வரும் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டெக் என்ற நிறுவனம் நொய்டாவில் சூப்பர் நோவா என்ற பெயரில் 80 அடுக்கு மாடி கட்டடத்தை கட்டி வருகிறது. இதுதான் இந்தியாவின் மிக உயரமான கட்டிடம் என அனைவராலும் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் நோவாவை கட்டமைத்து வரும் சூப்பர் டெக் நிறுவனம் மகாராஷ்டிரா வங்கிக்கு 700 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கிறது. இதனை அடுத்து மகாராஷ்ட்ரா வங்கி சூப்பர் நோவா திட்டத்துக்கு எதிராக திவால் தீர்வு நிலை வழக்கினை தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனை விசாரித்த சட்ட தீர்ப்பாயம் இந்த திட்டம் திவாலானதாக அறிவித்து , தீர்வுக்கான பணிகளை தொடங்க ஆணையிட்டுள்ளது.

80 அடுக்கு மாடிகள் கொண்ட சூப்பர் நோவா திட்டப் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதில் 70 அடுக்குகளை கட்டமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. சூப்பர் நோவாவில் ஈஸ்ட் நோவா ,வெஸ்ட் நோவா, அஸ்திராலிஸ் மற்றும் ஸ்பைரா என நான்கு டவர்களை கொண்டது. இதில் மூன்று டவர்களில் பணிகள் முடிந்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஸ்பைராவில் 60% பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் திடீரென இந்த திட்டம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் இதில் முதலீடு செய்தவர்களும் குறிப்பாக இங்கே வீடுகளை வாங்கியவர்களும் தற்போது சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.2012ஆம் ஆண்டு சூப்பர் நோவாவிற்காக சூப்பர் டெக் நிறுவனம் மகாராஷ்ட்ரா வங்கியில் கடன் வாங்கியது.
10 ஆண்டுகளில் படிப்படியாக கடனை திரும்ப செலுத்துவது என ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் சூப்பர் டெக் நிறுவனம் அதனை பின்பற்றவில்லை என்றும் மகாராஷ்ட்ரா வங்கி குற்றம்சாட்டியுள்ளது.
இதனை அடுத்து தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம், திவால் தீர்வு நடைமுறைகளை தொடங்க ஆணையிட்டுள்ளது. இதற்காக அஞ்சு அகர்வால் என்பவரை பணி நியமனம் செய்துள்ளது. திவால் நடைமுறையில் சமரசம் பேசி முடித்து பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சூப்பர் நோவாவில் எந்த முடிவுகளையும் நிறுவனம் எடுக்க கூடாது அஞ்சு அகர்வாலின் கண்காணிப்பின் கீழ் தான் திட்டம் செயல்படும் என சட்ட தீர்ப்பாயம் கூறிவிட்டது.
இதனிடையே தங்களிடம் வீடு புக் செய்து பணம் செலுத்தியவர்கள் கவலைப்பட வேண்டாம் என தெரிவித்துள்ள சூப்பர் டெக் குழும தலைவரான ஆர்கே அரோகரா இந்த திவால் நடைமுறையில் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்றும், உங்களது பணமோ அல்லது உங்களுக்கு நாங்கள் அளித்த உறுதிப்பாட்டையும் எந்த வகையிலும் மீற மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications