டெல்லி: கடந்த சனிக்கிழமையன்று தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், அதில் ஒரு முக்கிய அம்சமாக பான் அட்டை பெறுவதை எளிமையாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அதன்படி, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அவசியமான பான் அட்டை இனி ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில் உடனடியாக வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்,
மேலும் இதற்காக தனி விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவேண்டியதில்லை எனவும் பட்ஜெட்டில் கூறப்பட்டது.
எளிதாக்குகிறது
ஆதார் விபரங்களை கொண்டு இ-பான் சேவையை உடனே பெறும் வழிமுறையை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை அரசாங்கம் இந்த மாதத்தில் உருவாக்கும் என்றும் வருவாய் துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்திருந்தார். இந்த முறையானது பான் நம்பரை ஒதுக்கீடு செய்வதற்கான எளிதான செயல்முறையை எளிதாக்குகிறது என்றும் கூறப்படுகிறது.
விரைவில் செயல்பாட்டுக்கு வரலாம்
இந்த திட்டமானது விரைவில் செயல்பாட்டுக்கு வரலாம் என்றும், இதற்காக செயல்பாடுகளை உடைய கணினி செயல்முறை தயாராகி வருகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. சரி இதை எப்படி நாமே அப்டேட் செய்யலாம் என்று கேட்கிறீர்களா? வாருங்கள் அதைப் பற்றித் தான் பார்க்க போகிறோம்.
எப்படி அப்டேட் செய்வது?
வருமான வரித்துறை வலைதளத்திற்கு சென்று ஆதார் நம்பரை உள்ளீடு செய்யவும். இதற்கு அடுத்து ஆதார் எண்ணில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி எண் வரும். இந்த ஓடிபி நம்பரை கொடுத்த பின்னர் இ-பான் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காத்திருப்பு வேண்டாம்
இதற்கு முன்பு, பான் கார்டு பெற வேண்டுமெனில், அந்த மையங்களுக்கு சென்று குறிப்பிட்ட படிவங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். 14 நாட்களுக்கு பின்பு உங்களுக்கு பான் எண் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது பான் எண் பெறும் முறையை, வருமான வரித்துறை எளிமை ஆக்கியுள்ளது. இதன் மூலம் எளிமையாக பான் எண்ணும் கிடைக்கும்.
ஆதார் பான் எண் இணைப்பு
இது வரி செலுத்துவோர் இனி பணத்தையும் செலுத்தி பான் கார்டுக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டி அவசியமில்லை. மேலும் இது வீடு தேடி வரும் பான் எண்ணுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தவிர பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27-ஆம் தேதி நிலவரப்படி 30.75 கோடி பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனா்.
ஆதார் பான் இணைக்கப்படவில்லை
17.58 கோடி பேரின் பான் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. அவர்களும் பான் எண்ணை இணைப்பதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக இனியும் தாமதிக்காமல் உங்கள் பான் ஆதாரை இணையுங்கள்.