நம் நாட்டில் வங்கி சேவைகள் புது பரிணாமத்தை பெற தொடங்கியுள்ளன. வங்கிக்கு செல்லாமலேயே கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தாலே பெரும்பாலான வங்கி சேவைகளை நாம் பெற முடிகிறது. அந்த வகையில் மிக முக்கியமான ஒரு வங்கி சேவை இனி ஏடிஎம்களிலேயே கிடைக்க போகிறது.
நாம் புதிதாக வங்கிகளில் கணக்கு தொடங்கும் போது நமக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படும். பொதுவாக இந்த கார்டுகள் நம் வீட்டு முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். வங்கி கணக்கு தொடங்கிய சில நாட்களுக்கு பின்னர் தான் ஏடிஎம் கார்டுகள் கைக்கே வரும். ஆனால் இனி அந்த காத்திருப்பே தேவையில்லை. வாடிக்கையாளர்களுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாகவே தங்களுக்கு விருப்பமான RuPay கார்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். மும்பையில் நடைபெற்ற Global Fintech Fest 2026 நிகழ்ச்சியில் மத்திய அரசின் நிதி சேவைகள் துறை அறிவித்த மூன்று முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்று. இதன்படி ஏடிஎம் இயந்திரங்களே நமக்கான கார்டினை பிரிண்ட் செய்தே கொடுத்துவிடும்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான டெபிட் கார்டுகள் , கிரெடிட் கார்டுகள் மற்றும் National Common Mobility Cards எனப்படும் NCMC அட்டைகளை நேரடியாக ஏடிஎம் இயந்திரத்திலிருந்தே உடனடியாக பெற்று கொள்ளலாம். எனவே வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை உடனடியாக பயன்படுத்த தொடங்க முடியும்.
ஏடிஎம்கள் வெறும் பணத்தை மட்டும் வழங்கும் இயந்திரங்களாக இல்லாமல், எதிர்காலத்தில் பல்துறை டிஜிட்டல் வங்கி மையங்களாக செயல்படும் வகையில் மாற்றப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக RuPay கார்டுகளை அச்சிட்டு வழங்குவது, காசோலைகளை டெபாசிட் செய்வது, புதிய வங்கி கணக்கை தொடங்குவது மற்றும் கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது போன்ற சேவைகளையும் ஏடிஎம் இயந்திரங்கள் மூலமே நிறைவேற்றும் வகையில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
வங்கி கிளைகளை திறப்பது நடைமுறைக்கு சிரமமாக இருக்கும் இடங்களில், இந்த வகை நவீன ஏடிஎம் இயந்திரங்களை டிஜிட்டல் வங்கி யூனிட்களாக பயன்படுத்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, விமான நிலையங்கள், பொது போக்குவரத்து மையங்கள் , கல்வி வளாகங்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களில் இவை அமைக்கப்பட உள்ளன.
பாரத ஸ்டேட் வங்கி , பரோடா வங்கி , யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா , பஞ்சாப் நேஷனல் வங்கி , பாங்க் ஆஃப் இந்தியா , சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா , யூகோ வங்கி , ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் , ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி ஆகியவை இந்த தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்து வருகின்றன.
இது நடைமுறைக்கு வந்தால் நாட்டின் வங்கி துறையில் பெரிய மாற்றமாக பார்க்கப்படும். வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்லும் அலைச்சல் பெருமளவு குறைவதோடு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நிதி சேவைகள் எளிதாக மக்களை சென்றடையும்.


Click it and Unblock the Notifications


