சென்செக்ஸ் இன்று 2,919 புள்ளிகள் சரிவை சந்தித்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
இந்த நேரத்தில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் தொடர்பாக சில சுவாரஸ்ய தகவல்களைத் தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.
அதோடு சென்செக்ஸ் இண்டெக்ஸ் செய்த சில சுவாரஸ்ய விஷயங்களைப் பற்றியும் இதில் விரிவாகப் பார்ப்போம்.
1. ஒரு நாள் வீழ்ச்சி சாதனை
சென்செக்ஸ் வரலாற்றில், ஒரே நாளில் 2,919 புள்ளிகள் சரிந்ததே இல்லை. அதிகபட்சமாக மார்ச் 09, 2020 அன்று ஒரே நாளில் 1,941 புள்ளிகள் சரிவு கண்டது தான் மிகப் பெரிய சரிவாக கருதப்பட்டது. அந்த சாதனையை இன்று சென்செக்ஸ் உடைத்து இருக்கிறது. ஒரே நாளில் 2,919 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.
2. 52 வார விலை பங்குகள் எண்ணிக்கை
ஒவ்வொரு நாளும் பி எஸ் இ-ல் வர்த்தகமாகும் 2,500-க்கு மேலான பங்குகளில், 52 வார விலை உச்சம், 52 வார குறைந்த விலை என ஒரு தரவைப் பார்ப்பார்கள். இன்று வெறும் 13 பங்குகள் தான் தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு இருக்கிறது. ஆனால் 1,180 பங்குகள் தன் 52 வார குறைந்த விலையைத் தொட்டு இருக்கிறது. இப்படி இதற்கு முன் வரலாற்றில் நடந்து இருக்கிறதா என்று தெரியவில்லை.
3. தலை சுத்தும் மொத்த பங்குகள் விவரம்
இன்று மொத்தம் 2,573 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமாயின. அதில் 224 பங்குகள் மட்டுமே விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. சுமாராக 2,240 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. அதாவது இன்று பி எஸ் இ-ல் வர்த்தகமான மொத்த பங்குகளில் 87 % பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.
4. 33,000 புள்ளிகள்
கடந்த 02-04-2018-க்குப் பின் ஒரு நாள் கூட சென்செக்ஸ் 33,000 புள்ளிகளுக்குக் கீழ் வர்த்தகம் நிறைவடைந்ததே இல்லை. ஆனால் இன்று 32,778 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது சென்செக்ஸ். ஆக கிட்டத்தட்ட சென்செக்ஸ் நறுக்கென சுமாராக 2 ஆண்டுகள் பின் தங்கிவிட்டது.
5. ராஜாக்களுக்கே அடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச் டி எஃப் சி பென்ங்க், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற மிகப் பெரிய கம்பெனிகளின் பங்குகளே இன்று 52 வார குறைந்த விலையைத் தொட்டு இருக்கிறது என்றால் நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும் மேலே சொன்ன அனைத்து நிறுவனங்களின் பங்கு விலையும், இன்று, 52 வார குறைந்த விலையைத் தொட்டு இருக்கின்றன.