டெல்லி: வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மக்களவையில் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் 58 நிமிடங்களில் உரையாற்றினார்.
அவர் பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா என்ற திட்டம் குறித்தும் நிர்மலா பேசியிருந்தார். அதில் ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மூலம் மின்சார திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. மேலும் வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கப்படும் .
இதன் மூலம் ஆண்டுக்கு ரூ 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை சேமிக்கலாம். அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் பிரதமர் இந்த திட்டம் குறித்து தீர்மானித்திருந்தார். ஒரு ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு வேளை ஏற்கெனவே வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டிருந்தால் அது பிரதமரின் சூரியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வழிமுறைகளுடன் மெருகேற்றப்படும் என தெரிவித்திருந்தார் நிர்மலா சீதாராமன். கடந்த 22 ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும் அயோத்தியிலிருந்து டெல்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி திட்டம் குறித்து அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications