உத்தரபிரதேசத்தில் பல்வேறு துறைகளில் ரூ.80,000 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இது உபி மாநிலத்தின் இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உ.பி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர், "இன்று ரூ.80,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சாதனை முதலீடு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதற்காக உ.பி.யின் இளைஞர்களை நான் வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
இளைஞர்களின் சக்தி
மேலும் முதலீட்டாளர்களுக்கு இளைஞர்களின் சக்தி மீது நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்த அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கான சரியான நேரம் இதுதான் என்றும் கூறினார்.
8 ஆண்டுகள்
மத்தியில் ஆட்சியில் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மோடி கூறுகையில், "சமீபத்தில் 8 ஆண்டுகள் மத்திய ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். இந்த ஆண்டுகளில், சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற மந்திரத்தில் நாங்கள் முன்னேறினோம்.
ஒரே நாடு ஒரே வரி
ஒரே நாடு ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு, ஆகியவை மத்திய அரசின் நல்லாட்சியைப் பிரதிபலிக்கின்றன. 300 பொருட்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது, அவை இப்போது இறக்குமதி செய்யப்படாது, ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும்" என்று உ.பி முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவின் வளர்ச்சி
நாட்டில் கொள்கை ஸ்திரத்தன்மை, சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் எளிதாக வணிகம் செய்வதில் தனது அரசாங்கம் முக்கியமாக கவனம் செலுத்தி வருவதாக கூறிய பிரதமர் 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்திரப் பிரதேசம்தான் உத்வேகத்தைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இயற்கை விவசாயம்
உ.பி.யில் விவசாயத் துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அறிவுறுத்திய மோடி, "கங்கை நதி உ.பி.யில் மட்டும் 1,100 கி.மீட்டருக்கும் அதிகமாக உள்ளது என்றும், அந்த நதி 25-30 மாவட்டங்கள் வழியாக செல்கிறது என்றும் தெரிவித்தார். இதனால் இயற்கை விவசாயத்தின் மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை கற்பனை செய்து கொள்ளுங்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications