கொரோனா வைரஸை பெரும் தொற்று நோயாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்த பின், தொடர்ந்து 2,000 புள்ளிகள் சரிவு, 3,000 புள்ளிகள் சரிவு எனப் பார்த்து பழகிவிட்டோம்.
இப்போது திடீரென 2,476 புள்ளிகள் ஏற்றம் என்றால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடித் தான் போகிறோம்.
சென்செக்ஸ் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத படி, ஒரே நாளில் 8.9% ஏற்றம் கண்டு இருக்கிறது.
கொரோனா பயம்
இன்று காலை பங்குச் சந்தை தொடர்பான செய்தியிலேயே, கொரோனா வைரஸ் பயம், சர்வதேச சந்தையில் கொஞ்சம் குறைந்து இருப்பதாகவே சொல்லி இருந்தோம். அதை ஆமோதிக்கும் வகையில் ஐரோப்பிய சந்தைகளும் கணிசமாக 3 - 4.03 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
சென்செக்ஸ்
கடந்த வெள்ளிக் கிழமை மாலை, 27,590 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று காலை 28,898 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. அதிகபட்சமாக 30,157 புள்ளிகளைத் தொட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வர்த்தக நேர கொஞ்சம் இறக்கம் கண்டு, 30,067 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. ஆக நேற்றைய குளோசிங்கில் இருந்து இன்றைய குளோசிங் புள்ளியான 30,067 புள்ளிகளை கணக்கிட்டால் 2,476 புள்ளிகள் ஏற்றத்தில் நிறைவடைந்து இருக்கிறது.
பங்குகள் நிலை
சென்செக்ஸின் 30 பங்குகளில் 30 பங்குகளும் ஏற்றத்திலும், வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் 2,576 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,843 பங்குகள் ஏற்றத்திலும், 539 பங்குகள் இறக்கத்திலும், 194 பங்குகள் விலை மாற்றம் இன்றியும் வர்த்தகமாயின. இதில் 26 பங்குகள் 52 வார விலை உச்சத்தையும் தொட்டது குறிப்பிடத்தக்கது.
8 லட்சம் கோடி ரூபாய்
இன்றைய சென்செக்ஸ் சந்தையின் 8.9 சதவிகித ஏற்றத்தினால் கடந்த வெள்ளிக் கிழமை பங்குச் சந்தை நிறைவடையும் போது இருந்த மதிப்பை விட 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு அதிகரித்து இருக்கிறது. சுருக்கமாக நேற்று நீங்கள் முழு பி எஸ் இ பங்குச் சந்தையை வாங்கி இருந்தீர்கள் என்றால், இன்று அதன் மதிப்பு 8 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து இருக்கும்.
டாலர் & கச்சா எண்ணெய்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு வழியாக 76 ரூபாய்க்குக் கீழ் வந்து இருக்கிறது என்றாலும், இந்திய ரூபாய் மதிப்பு 75.5 ரூபாய்க்கு மேலேயே இருக்கிறது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 75.63 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமாராக 33.92 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
பங்குகள்
இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹிண்டால்கோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, க்ராசிம் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ரிலையன்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், பஜாஜ் ஃபிஅனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஹெச் டி எஃப் சி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.