இந்தியாவின் முன்னணி ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனங்களான ஐஓசி, பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் ஆகியவை கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 5 மாநில தேர்தல் காலக்கட்டத்தின் போது மாற்றாமல் வைத்திருந்த காரணத்தால் மிகப்பெரிய வருவாய் இழப்பை எதிர்கொண்டு உள்ளது.
ஐஓசி, பிபிசிஎல், ஹெச்பிசிஎல்
நவம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத நிலையில் ஐஓசி, பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் ஆகிய 3 பெரும் நிறுவனங்களுக்கு சுமார் 19,000 கோடி ரூபாய் கிட்டத்தட்ட 2.25 பில்லியன் டாலர் அளவிலான வருவாயை இழந்துள்ளன என்று மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
5 மாநில தேர்தல்
5 மாநில தேர்தலையொட்டி மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஐஓசி, பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் ஆகிய 3 பெரும் நிறுவனங்கள் நவம்பர் 4, 2021 மற்றும் மார்ச் 21 க்கு இடையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறாமல் வைத்திருந்தது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ஆனால் இந்த காலக்கட்டத்தில் தான் எரிபொருள் சப்ளை பிரச்சனை காரணமாகவும், ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் 82 டாலரில் இருந்து 139 டாலர் வரையில் உயர்ந்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
மார்ச் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் சராசரியாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் 111 அமெரிக்க டாலராக உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்பிசிஎல்) ஆகியவை மார்ச் 22 மற்றும் 23 தேதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தின, ஆனால் வியாழக்கிழமை எவ்விதமான உயர்வையும் அறிவிக்கவில்லை.
கணிப்பு
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு ஒரு டாலர் உயரும் பட்சத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து லாபத்தில் இயங்க வேண்டும் என்றால் லிட்டருக்கு 0.52 ரூபாய் உயர்த்த வேண்டும். இப்படி பார்க்கும் போது தற்போது எண்ணெய் நிறுவனங்கள் 15 முதல் 20 ரூபாய் வரையில் உயர்த்த வேண்டும்.
கச்சா எண்ணெய் விலை
இன்றைய வர்த்தகத்தில் சர்வதேச சந்தையில் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 1.77 சதவீதம் சரிந்து 112.9 டாலராகவும், பிரிட்டன் நாட்டின் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 1.55 சதவீதம் சரிந்து 119.7 டாலராகவும் உள்ளது.