இந்தியா முழுவதும் இரண்டு மாதத்திற்கும் மேலாக நீடித்த ஐபிஎல் ஃபீவர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 19ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. கோப்பை கைப்பற்ற போவது யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியன் பெங்களூரு லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் முதலிடம் பிடித்துள்ளது. 2022ஆம் ஆண்டு சாம்பியனான குஜராத் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட்டில் பின்தங்கியதால் 2ஆவது இடம் பிடித்தது. இன்றைய போட்டிகளை இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு ரசிக்க உள்ளனர். பொது இடங்களில் எல்லாம் ஐபிஎல் இறுதி போட்டியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக ஆதிக்கம் செலுத்தும் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இந்த ஆண்டு சரியாக விளையாடவில்லை. வழக்கமாக இந்த இரண்டில் ஒரு அணி இறுதி போட்டிக்கு வந்துவிடும். ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை என்பதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இருந்தாலும் ஐபில் இறுதி போட்டியை காண்போர் எண்ணிக்கை குறைய போவதில்லை.
இரண்டு அணிகளுக்குமே இந்த முறை வெற்றி என்பது இரண்டாவது ஐபிஎல் கோப்பையை பெற்று தருவதாக இருக்கும். ஐபிஎல் இறுதி போட்டியில் வெல்லும் அணிக்கு பெரும் பரிசு தொகையே காத்திருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் பரிசு தொகைக்கு என இந்திய கிரிக்கெட் வாரியம் ஆன பிசிசிஐ 46.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதில் ஐபிஎல் கோப்பையை வெல்லப் போகும் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும். அத்துடன் ஐபிஎல் கோப்பை வழங்கப்படும்.
இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இந்த டோர்னமெண்ட்டில் இரண்டாவது இடம் பிடிக்கக் கூடிய அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசு தொகையாக கிடைக்கும். மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா 6.5 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் இரண்டு சீசன்களில் ஐபிஎல் கோப்பை வென்ற அணிகளுக்கான பரிசு தொகையாக 4.8 கோடி ரூபாய் வழங்கப்பட்டது அதன் பிறகு இது படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 20 கோடி ரூபாயாக வழங்கப்படுகிறது.
போட்டியில் ஐந்திலிருந்து பத்தாவது இடம் வரை பிடிக்கக்கூடிய அணிகளுக்கு எந்த ஒரு பரிசு தொகையும் கிடைக்காது. ஆனால் அந்த அணிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் , டிக்கெட் விற்பனை மற்றும் ஒளிபரப்பு உரிமம் உள்ளிட்டவற்றின் மூலம் ஒரு கணிசமான அளவு வருமானம் என்பது கிடைக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி அல்லது பெங்களூர் அணி எந்த அணி வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய 20 கோடி ரூபாய் தொகையில் 10 கோடி ரூபாய் வீரர்களுக்கும் 10 கோடி ரூபாய் அந்த அணியின் உரிமையாளருக்கும் என பிரித்து வழங்கப்படும்.
இது தவிர தனிப்பட்ட முறையில் வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஆரஞ்சு கேப் மற்றும் பர்பிள் கேப் உள்ளிட்ட பெயர்களில் விருதுகள் வழங்கப்படும் அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளீப்படுத்தும் வீரர்களுக்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சிறந்த தொகையில் ஏலம் எடுக்கப்படுவார். அதே போல வெற்றி பெறும் அணியின் வீரர்களுக்கு விளம்பர வாய்ப்பு பெருகி அதுவே தனி வருமானத்தை பெற்று தரும்.


Click it and Unblock the Notifications

