இந்தியர்களுக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கும் இடையிலான உறவு நகமும் சதையும் போன்றது. அதுவும் ஐபிஎல் போட்டிகள் இந்திய மக்களின் முக்கியமான ஒரு பொழுது போக்கு அம்சமாகவே மாறிவிட்டன. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஒட்டுமொத்த இந்தியாவும் பொழுதை போக்கும் ஒரு விஷயமாக ஐபிஎல் போட்டிகள் தான் இருக்கின்றன.
ஐபிஎல் போட்டிகளுக்கும் ஐபிஎல் அணிகளுக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் கொண்டு வரப்படும் எந்த ஒரு மாற்றமும் கோடிக்கணக்கான மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் வழக்கமாக கோடை காலத்தில் தான் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக ஏப்ரல், மே என வெயில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை, இனிவரும் காலங்களில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு மாற்ற பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது. கடுமையான வெயில் மற்றும் விளம்பரதாரர்களின் வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு இந்த பரிசீலனை நடக்கிறது.
கடும் வெயில் காரணமாக வீரர்கள் உடல் சோர்வுக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமில்லாமல் மைதானத்திற்கு வரும் ரசிகர்களும் அவதிப்படுகின்றனர். எனவே வரும் 2028 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை இரண்டாக பிரிக்க திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம். செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஒரு பிரிவு போட்டியும் ஏப்ரல் - மே மாதங்களில் ஒரு பிரிவு போட்டியும் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.
ஐபிஎல் தலைவர் அருண் துமால் அண்மையில் அளித்த பேட்டியில் ஐபிஎல் தொடரை பிரிப்பது மற்றும் செப்டம்பரில் நடத்துவது குறித்து ஒளிபரப்பு நிறுவனங்களுடன் விரிவாக ஆலோசிக்க வேண்டும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடரை நடத்துவது குறித்து ஒரு வலுவான பரிந்துரை வந்துள்ளது என்றார். வர்த்தக ரீதியாகப் பார்த்தால், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய அந்த காலகட்டம் விளம்பரதாரர்களுக்கு மிகவும் சாதகமான நேரமாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.
தற்போது 10 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் அணிகளையும் போட்டிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். எனவே அதற்கேற்ப போட்டிகளை இரண்டாக பிரிக்க வாய்ப்புள்ளது.
ஆனால் ஐபிஎல் தொடரை இப்படி செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடத்துவதும் சவாலானது தான். ஏனெனில் பெரும்பாலான சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மற்றும் இருதரப்பு போட்டிகள் குளிர் காலங்களில் நடக்கும். ஐபிஎல் போட்டிகளில் சர்வதேச வீரர்கள் பலரும் பங்கேற்பதால் அதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் போட்டி காலம் என்பது மாற்றப்படும்.
ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் மட்டுமல்ல இது ஐபில் மூலம் விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கும் நல்ல செய்தி. ஏன்னில் இந்தியாவில் செப்டம்பரில் இருந்து அடுத்தடுத்து பண்டிகைகள் நடக்கும். இந்த சமயத்தில் விளம்பரங்கள் மூலம் மக்களை ஈர்க்க ஐபிஎல் முக்கிய வாய்ப்பாக அமையும். பிசிசிஐ-க்கு பல நிறுவனங்கள் போட்டி போட்டு விளம்பரம் தரும் என்பதால் வருமானம் பெருகும்.


Click it and Unblock the Notifications

