அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் ஈரான் ராணுவம் சனிக்கிழமை அமெரிக்க ராணுவ கப்பல் மீதும், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் டிரோன் மற்றும் எண்ணெய் கப்பல் என அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக திங்கட்கிழமை வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.88 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 97.13 டாலராக உயர்ந்துள்ளது, WTI கச்சா எண்ணெய் விலை 0.94 சதவீதம் உயர்ந்து 92.34 டாலராக உள்ளது.

இதற்கிடையில் ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய கப்பல் போக்குவரத்துக்கான பாதையை ஈரான் மற்றும் ஓமன் இணைந்து உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதை விரைவில் அறிவிக்க உள்ளதாக ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் வழித்தடத்தை ஈரானின் முழு கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதற்காக புதிய பாதையின் நுழைவுப் பகுதி ஈரானின் கடல் எல்லை வழியாகவும், வெளியேறும் பாதையின் ஒரு பகுதியும் ஈரான் கடல் எல்லை வழியாகவும் இருக்கும் வகையில் வடி மைக்கப்பட்டு உள்ளதாகவும் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாதி தெரிவித்தார்.
புதிய வழித்தடத்தின் அகலம் என்பது வெறும் 11.3 கிமீ வரையில் மட்டுமே இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடத்தில் கடல் கண்ணவெடிகள் வைத்து ஹார்முஸ் வழித்தடத்தை மொத்தமாக கன்ட்ரோலில் எடுக்க இலக்கு வைத்துள்ளது.
புதிய வழித்தடம் குறித்து ஈரான் ஓமன் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும் எப்போது நடைமுறைக்கு வரும், இவ்வழித்தடத்தில் செல்லும் கப்பல்களிடம் வரி வசூலிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய பாதையில் கட்டணம் அல்லது வரி வசூலிக்கப்படும் பட்சத்தில், இதன் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வாறு பகிரப்படும், எவ்வாறு வசூலிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதேவேளையில் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பெர்சியன் வளைகுடா பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் அதாவது யாரும் நுழைய கூடாத தடை செய்யப்பட்ட இடத்தை அறிவிக்க ஈரான் ராணுவம் திட்டமிட்டு வருவதாக ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமாயின், ஹார்முஸ் வழித்தடத்தில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு ஈரான் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்றால் ஜூன் மாதம் இரு நாடுகள் மத்தியில் கொண்டு வரப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்கா அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்துகிறது.
குறிப்பாக ஈரான் மீதும், ஈரான் பொருளாதாரம் மீது அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகள் விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்தி, முடக்கப்பட்ட ஈரானிய சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications


