அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 3 மாதங்களுக்கு மேலாக நீடித்த போர் கடந்த வார தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது. இரு தரப்பும் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஈரான் போர் முடிந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு விட்டது கச்சா எண்ணெய் போக்குவரத்தும் சீராகிவிடும் என உலகமே நிம்மதி அடைந்தது. இந்த சூழலில் திடீரென இரு நாடுகளும் கடந்த வார இறுதியில் மீண்டும் தாக்குதலை தொடங்கின.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் தாக்குதல் தொடங்கியதால் பழைய படி போர் தொடங்கிவிட்டது என உலக நாடுகள் அச்சமடைந்தன. இதற்கிடையே இரு நாடுகளும் தாக்குதலை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளன.அமெரிக்க தரப்பு அதிகாரிகள் ஆக்சியோ தளத்திற்கு அளித்துள்ள தகவலில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என தெரிவித்திருக்கின்றனர்.

இருதரப்பும் தற்போதைக்கு தாக்குதலை நிறுத்தவும் ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமாக சரக்கு கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து நடக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.கடந்த ஜூன் 17ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். செவ்வாய்க்கிழமை முதல் கத்தாரில் தொழில்நுட்ப அடிப்படையிலான பேச்சுவார்த்தை நடக்கும் என உறுதி தந்தனர்.
கடந்த வியாழக்கிழமை அன்று ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஒரு சரக்கு கப்பலின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது . இதனை அடுத்து அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் போர் பதற்றம் உண்டானது. அதுமட்டுமில்லாமல் குவைத் மற்றும் பஹ்ரைனில் இருந்து அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் தாக்குதல் நடத்தியது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக வரைபடத்தில் இருந்து ஈரானை அழித்துவிடுவேன் என அச்சுறுத்தி இருந்தார்.
இந்த சூழலில்தான் இருதரப்பும் தாக்குதலை விடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்திருக்கின்றன. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீராக நடக்கிறது. எனவே கச்சா எண்ணெய் சப்ளை நிறுத்தம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் அணுசக்தித் திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகள் போன்ற பல சிக்கலான விவகாரங்களில் ஒரு சுமூகமான தீர்வை எட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் உலகப் பொருளாதாரத்திற்கும், அமைதிக்கும் மிக முக்கியமான ஒன்று. இருந்தாலும் இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக கடும் கருத்து வேறுபாடுகள் இருப்பதால் நிரந்தரமான தீர்வை எட்ட கால அவகாசம் தேவைப்படும். வரும் நாட்களில் இந்த பேச்சுவார்த்தைகள் எந்த திசையில் செல்கின்றன என்பது தான் மிக முக்கியம்.


Click it and Unblock the Notifications

