அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கும் நிலையில் தற்போது ஒரு மிக முக்கியமான அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு. இதன் கரன்சியான டாலரில் தான் எப்போதும் உலக நாடுகள் தங்களுக்குள் பொருட்களை வாங்கவும் விற்கவும் செய்யும். ஏனென்றால் உலகப் போர் போன்ற இக்கட்டான சூழல் வந்தாலும் டாலரின் மதிப்பு சரிந்து விடாது என்று உலக நாடுகளுக்கு அவ்வளவு நம்பிக்கை.
ஆனால் "நாங்கள் எண்ணெய் விற்பனை செய்யும் நாடுகள் டாலரில் காசு தரவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எங்களுக்கு விருப்பமான எந்த கரன்சியில் வேண்டுமானாலும் நாங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ள தயார்", என்று ஈரான் மத்திய வங்கியின் கவர்னர் அப்தோல்நசர் ஹெம்மாட்டி கூறியுள்ளார். இந்த செய்தியை அந்நாட்டு செய்த நிறுவனமான அல்ஜசீரா வெளியிட்டுள்ளது. ஈரான் அரசு இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருக்கிறது.
அமெரிக்கா விதித்திருந்த தடைகளால் ஈரான் திணறி வந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அதோடு இரு நாடுகளும் இணைந்து சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனால் ஈரானின் 12 பில்லியன் டாலர் சொத்துக்களை மீட்பது, எண்ணெய் வணிகக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது போன்ற விஷயங்களையும் ஈரான் கலந்தாலோசித்து வருகிறது. இந்த சூழலில் ஈரான் எடுத்துள்ள இந்த கரன்சி முடிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரானின் இந்த மாற்றத்தினால் இந்தியாவிற்கு என்ன பலன் கிடைக்கும்? என்பதைப் பார்ப்போம்.

ஈரானில் எண்ணெய் தொடர்பான எந்தத் தடைகள் தளர்த்தப்பட்டாலும் சரி அது இந்தியாவிற்கு நிச்சயம் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். ஈரான் நமக்கு மிக மிக அருகில் இருக்கிறது. இதனால் கப்பல் போக்குவரத்துச் செலவு மற்றும் பயண நேரமும் குறையும். நாம் மற்ற நாடுகளில் எண்ணெய் வாங்கினால் அதற்கு 30 நாட்களுக்குள் பணம் செலுத்தியாக வேண்டும். ஆனால் ஈரான் நமக்கு 60 முதல் 90 நாட்கள் வரை அவகாசம் வழங்குகிறது.
2019-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை ஈரானிலிருந்து அதிகம் கச்சா எண்ணெய்யை வாங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் 2019-ஆம் ஆண்டு அமெரிக்கா விதித்த தடைகளால் தனது வர்த்தகத்தை இந்தியா நிறுத்த வேண்டிய நிலை வந்தது. அதற்கு முன்பு வரை இறக்குமறையில் சுமார் 11.5% கச்சா எண்ணெய் ஈரான் மூலமாகத்தான் இந்தியாவை வந்தடைந்தது.
கரன்சியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று ஈரான் கூறி இருந்தாலும் இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளும். ஒன்று ஈரான் நமக்கு கொடுக்கும் விலையில் தள்ளுபடி இருக்குமா?, லாஜிஸ்டிக் வசதிகள் எல்லாம் எப்படி இருக்க போகிறது? என்பதை எல்லாம் பொறுத்து இந்தியா எண்ணெயை வாங்கும்.
தற்போது வரை ஈரானின் மொத்த எண்ணெய் விற்பனையில் சீனா முக்கிய இடம் வகிக்கிறது. இதனால் மற்ற உலக நாடுகள் ஈரான் பக்கம் திரும்புவது கொஞ்சம் சந்தேகத்திற்கு இடமானது தான் என்று பிரபல டேட்டா இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தின் லீட் சுமித் ரித்தோலியா கூறியுள்ளார்.
ஈரான் தங்களுடைய சார்பில் பணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிவிட்டது. இதை உண்மையிலேயே இந்தியா பயன்படுத்தப் போகிறதா? இந்தியாவின் அடுத்த நகர்வு என்ன? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications