பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய ஈரான் போர் ஆறு வார காலமாக நீடித்தது. இந்த போர் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து இருதரப்பு அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் அமெரிக்கா சார்பாக துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். இந்த பேச்சு வார்த்தையில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை எனவே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அமெரிக்கா அறிவித்தது.

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியில் எந்த நாட்டின் கப்பல்களின் போக்குவரத்திற்கும் தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். ஹார்முஸ் வழியே செல்லக்கூடிய கப்பல்களிடமிருந்து ஈரான் கட்டணம் வசூலிப்பதாக வெளியான தகவலை அடுத்து அதனை தடுக்க இந்த நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் கூறினார்.
இந்த சூழலில் இதற்கு பதிலடி தந்துள்ள ஈரான் நாட்டு சபாநாயகர் முகமது பாக் காலிபா தனது சமூக வலைதள பக்கத்தில் வெள்ளை மாளிகை அருகே உள்ள பெட்ரோல் பங்க் விலைகளின் படத்தை பகிர்ந்துள்ளார். தற்போதுள்ள பெட்ரோல் விலைகளை ரசித்து அனுபவியுங்கள் இந்த தடை வந்தபின் பழைய விலையை நீங்கள் ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்க நேரிடும் எனக் கூறியிருக்கிறார்.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முடக்குவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை குறிப்பிடக் கூடிய வகையில் ஒரு கணித ஃபார்முலாவையும் அவர் பதிவிட்டுள்ளார். இதன்படி முதல் கட்டத்தில் எண்ணெய் விலை உயரும், இரண்டாவது கட்டத்தில் சரக்கு போக்குவரத்து செலவு உயரும், அடுத்ததாக உணவுப் பொருட்கள் விலை உயரும் , பண வீக்கம் அதிகரிக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
ஈரான் ராணுவம் அமெரிக்காவின் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை சட்டவிரோதமானது மட்டுமல்ல கடற்கொள்ளைக்கு நிகரானது என தெரிவித்திருக்கிறது. மேலும் தங்கள் நாட்டு துறைமுகங்களுக்கு அச்சுறுத்தும் ஏற்பட்டால் மேற்காசிய நாடுகளின் எந்த ஒரு துறைமுகமும் இருக்காது என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதற்கிடையே மீண்டும் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பதை ஈரான் எடுக்கும் முடிவுகளே தீர்மானிக்கும் எனக் ஜே.டி.வான்ஸ் கூறியிருக்கிறார். நிபந்தனைகளை ஈரான் ஏற்கும் பட்சத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ஈரான் - அமெரிக்கா இடையே இரண்டாவதாக ஒரு அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதில் பாகிஸ்தான் மீண்டும் ஒரு முயற்சி எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. போர் நிறுத்தம் அடுத்த வாரம் முடிவுக்கு வரக்கூடிய சூழலில் அதற்குள் ஒருமுறை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான், துருக்கி, எகிப்து மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த முறை ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications