செப்டம்பர் காலாண்டு முடிவில் இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்துத் துறையான இந்திய ரயில்வே துறையின் டிக்கெட் புக்கிங் மற்றும் கேட்ரிங் சேவை நிறுவனமான IRCTC-ன் மொத்த லாபம் அளவீடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 386 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
இந்தத் திடீர் உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் லோவர் பேஸ் எபக்ட் தான், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கொரோனா தொற்று காரணத்தால் பெருமளவிலான சேவைகள் முடக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வருடம் அனைத்து சேவைகளும் கிட்டதட்ட முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்த காரணத்தால் லாபம் அளவீடுகள் அதிகமாக உள்ளது.
IRCTC லாபம்
செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் IRCTC நிறுவனத்தின் மொத்த லாப அளவீடு 158.5 கோடி ரூபாயாக இருந்த நிலையில், வரிக்கு பிந்தைய லாபமாக 32.60 கோடி ரூபாயாக உள்ளது. மேலும் முதல் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக 82.50 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
IRCTC வருவாய்
கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் ஆப்ரேட்டிங் வருமானமாக வெறும் 88.50 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 357 சதவீதம் அதிகரித்து 405 கோடி ரூபாயாக உல்ளது. மேலும் இக்காலாண்டில் கேடரிங், டிக்கெட் விற்பனை முதல் அனைத்து பிரிவுகளிலும் வர்த்தகம் உயர்ந்துள்ளது.
IRCTC டிக்கெட் விற்பனை
குறிப்பாக டிக்கெட் விற்பனை கடந்த ஆண்டுச் செப்டம்பர் காலாண்டில் வெறும் 58.30 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 355 சதவீதம் வளர்ச்சி அடைந்து 265.30 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் கேட்ரிங் சேவையில் 17.20 கோடி ரூபாயாக இருந்த வருமானம் 315 சதவீதம் அதிகரித்து 71.40 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
IRCTC பங்கு விலை
இன்று ஐஆர்சிடிசி பங்குகளின் விலை 1.22 சதவீதம் வரையில் உயர்ந்து 856 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மத்திய ரயில்வே துறையின் 50 சதவீத கட்டண தொகை பகிர்வு திட்டம் மூலம் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட ஐஆர்சிடிசி பங்குகள் தனது சரிவில் முழுமையாக மீண்டு வராவிட்டாலும் கணிசமாக மீண்டுள்ளது.