பொதுவாக இந்த கொரோனா வந்ததில் இருந்தே இந்தியாவில் கிட்டதட்ட அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன என்று தான் சொல்ல வேண்டும்.
அதோடு அனைத்து போக்குவரத்து சாதனங்களும் முடங்கியுள்ளன என்று தான் கூற வேண்டும். அது வான் வழியாக இருக்கட்டும், தரைவழியாக இருக்கட்டும், நீர்வழிப்பாதை என அனைத்தும் அத்தியாவசிய தேவை தவிர அனைத்தும் முடக்கப்பட்டன.
இந்த நிலையில் ரயில்வே துறையினை மட்டுமே நம்பியிருந்த ஐஆர்சிடிசி நிறுவனமும் பெருத்த அடி வாங்கியது எனலாம். ஆனால் இந்த லாக்டவுன் காலத்தில் கூட கிடு கிடுவென ஏற்றம் கண்டுள்ளது ஐஆர்சிடிசி பங்கின் விலை.
பங்கு விலை கிடு கிடுவென அதிகரிப்பு
குறிப்பாக கொரோனாவின் தாக்கத்தினை குறைக்க பிரதமர் மோடி மார்ச் 24 அன்று அறிவித்த லாக்டவுன் அன்று, சென்செக்ஸ் 26,674 ஆக முடிவடைந்தது. ஆனால் அது இன்று வரை வெறும் 14 சதவீதம் மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் மார்ச் 24 அன்று ஐஆர்சிடிசி பங்கின் விலையானது 858 ரூபாயாகவும் அன்று முடிவடைந்தது. இன்று அதன் விலை 1334 ரூபாயாக முடிவடைந்துள்ளது. ஆக ஐஆர்சிடிசி பங்கின் விலையானது 55 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
இதற்கு என்ன காரணம்?
இது லாக்டவுனுக்கு பிறகு ஐஆர்சிடிசி வருவாய் மற்றும் லாபத்தன்மைக்கு மாறலாம் என்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதாகவும், இதனால் ஏற்றம் கண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், ஐஆர்சிடிசி பங்கினை ஒவ்வொரு முனையிலும் வாங்கப்பட வேண்டும். இது வணிக ரீதியாக ஒரு ஏகபோக வணிகமாகும். ஏனெனில் கடன் இல்லை.
நல்ல லாபம் தரும் பங்கு
அதோடு அரசின் ஆதரவோடு செயல்பட்டு வருகிறது. ஆக நீண்ட கால நோக்கில் இது நல்ல லாபம் தரும் பங்காகவும் உள்ளது. அதனால் இதில் புதிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. குறுகிய காலத்தில் பங்குகள் நிலையற்றதாக காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு ரயில் இயக்கம்
சரி இன்று ஏன் ஐஆர்சிடிசி பங்கு அப்பர் சர்கியூட் ஆனது. ஏனெனில் மக்களுக்கு பெரும் நிவாரணம் வழங்கும் ஒரு முன் முயற்சியில், நாட்டின் சிறு நகரங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் பாதையில், இந்திய ரயில்வே ஜூன் 1 முதல் 200 சிறப்பு பயணிகள் ரயில்களை இயக்கும் என்று தேசிய ரயில் போக்குவரத்து அமைச்சகம் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது. அதன் எதிரொலியாக விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று அப்பர் சர்க்யூட் ஆன பங்கு விலை
இந்த நிலையில் இன்று இதன் பங்கு விலையில் 5% ஏற்றம் கண்டு 1,334 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று மட்டும் பிஎஸ் இயில் 63.50 ரூபாய் அதிகரித்துள்ளது. முந்தைய நாள் முடிவு விலையானது 1,270 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இதே என் எஸ் இயிலும் 5 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
டிக்கெட் பதிவு
மேலும் ஜூன் 1லிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் பதிவானது ஆன்லைனில் மட்டும் செய்யப்படும் என்றும், அது இன்னும் சில தினங்களில் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதே ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் அரசின் இந்த அறிவிப்புக்கு பின்னர், அடுத்த இரண்டு நாட்களில் 200 ரயில்கள் என்பது 400 ஆக அதிகரிக்கப்படும் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.