மும்பை : இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி, பொதுவெளியீடு முதல் கொண்டே களைகட்டி வருகிறது. இந்த பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட ஒரு மாதத்திலேயே 200 சதவிகித லாபத்தை கொடுத்துள்ளது.
இந்த நிறுவனம் கடந்த புதன் கிழமையன்று இதன் வராலாற்று உயரமான 981.35 ரூபாயை தொட்டது. இந்த நிலையிலேயே, இந்த நிறுவனத்தின் பங்குகள் வெறும் 31 நாட்களில் 206 சதவிகித லாபத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
இந்த நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு தொடங்கி, தற்போது வரை இந்த பங்கு விலையானது தொடர்ச்சியான ஏற்றம் கண்டு வருகிறது. இதை அசுர வளர்ச்சி என்று தான் கூறவேண்டும்.
அதிகளவில் முதலீடு
சிறு சிறு சில்லறை முதலீட்டாளர்கள் முதல் கொண்டு, பெரிய பெரிய நிறுவனங்கள் வரை சகட்டுமேனிக்கு இந்த பங்கினை வாங்கி போட்டார்கள். இதனால் 2.01 பங்குகளுக்கு 225.09 கோடி விண்ணப்பங்கள் வந்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இது தான் உண்மை. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்டது. அதிலும் இதில் என்ன ட்விஸ்ட் எனில், ஐ.பி.ஒவில் இந்த பங்கானது 320 என்ற விலைக்கு விற்கப்பட்ட நிலையில், பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட ஆரம்பத்திலேயே 725 ரூபாய் மேல் வர்த்தகமானது தான்.
அசுர லாபம்
இந்த நிலையில் தொடர்ச்சியான ஏற்றம் கண்டு வரும் இந்த நிறுவனம், இன்று (நவம்பர் 14, 2019) ஒரு மாத காலத்திற்கு பின்பு, தற்போது 22 ரூபாய் வீழ்ச்சி கண்டு 910 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் கடந்த புதன் கிழமையன்று இதன் புதிய உச்சமான 981 ரூபாய் வரை சென்று சற்று சரிந்துள்ளது. இதன் படி முதலீட்டாளர்கள் வெறும் ஒரு மாதத்தில் 206 சதவிகித லாபத்தை கண்டுள்ளனர்.
சந்தை மூலதனமும் அதிகரிப்பு
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் (market capitalisation) பங்கு சந்தையில் பட்டியிலிடப்பட்ட அன்று 10,736 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நவம்பர் 13 அன்று 14,908 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த புதன் கிழமையன்று இந்த பங்கின் விலையானது 5.20 சதவிகிதம் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த நிலையில் சந்தை முடிவில் 932.80 ரூபாயாகவும் முடிவடைந்தது. இதன் படி இதன் சந்தை மூலதனம் 15,575 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி பங்கு விற்பனை
அரசுக்கு முழுவதும் சொந்தமான இந்த நிறுவனம் 100 சதவிகித பங்கினை வைத்திருந்த நிலையில், தற்போது 12.6 சதவிகித பங்கினை விற்றுள்ளது. நிலையில் இந்த பொதுப் பங்கு வெளியீட்டுக்கு பின்பு அரசின் பங்கு 87.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் அரசின் செயல்பாடுகளினால் இந்த நிறுவனத்தின் இலாபம் அதிகரிக்கலாம் என்றும் கருதப்பட்டது.
விலை அதிகரிக்கலாம்
அரசின் பல சலுகைகள் ஊக்குவிப்பு நடவடிக்கைகள், வரும் காலத்தில் டிக்கெட் விலை அதிகரிக்கலாம், இது எல்லாவற்றையும் விட இந்த நிறுவனத்திற்கு போட்டி நிறுவனம் என்றும் எதுவும் கிடையாது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது யாரும் எதிர்பாராத அளவு ஏற்றம் கண்டுள்ளது. இதுபோன்ற பல காரணிகளால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்று வரை வலுவான நிலையிலேயே உள்ளது.