இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தைக் கொடுத்த ஒரு பொதுத்துறை நிறுவனம் என்றால் அது IRCTC தான். கடந்த ஒரு வருடத்தில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வந்த IRCTC பங்குகள் இன்று ஒரு மணிநேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தடாலடியாக ஒரு பங்கிற்கு 1,400 ரூபாய் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இன்று மாலை 2.45 வரையில் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வந்த IRCTC பங்குகள் வர்த்தகம் முடியும் நேரத்தில் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திற்காக அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் 15 சதவீதம் சரிவடைந்துள்ளது.
IRCTC நிறுவனப் பங்குகள்
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தளமான இந்திய ரயில்வே துறையின் டிக்கெட் புக்கிங் மற்றும் இணையச் சேவை நிறுவனமான IRCTC நிறுவன பங்குகள் தாறுமாறாக வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் இன்று மிகப்பெரிய சரிவை பதிவு செய்து முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
வரலாற்று உச்சம்
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 62,245 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்தது போலவே ஐஆர்சிடிசி பங்குகளும் இன்று காலை வர்த்தகத்தில் 6,369.30 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்றைய வர்த்தகம் முடியும் நேரத்தில் பெரும் முதலீட்டாளர்கள் தடாலடியாக ஐஆர்சிடிசி பங்குகளை விற்பனை செய்துள்ளனர்,
ஐஆர்சிடிசி வளர்ச்சி
ஐஆர்சிடிசி பங்குகள் கடந்த 5 நாளில் 30 சதவீதம், ஒரு மாதத்தில் 70 சதவீதம், 2021ல் 333 சதவீதம் என மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சொல்லப்போனால் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மட்டும் ஐஆர்சிடிசி பங்குகள் இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
மோனோபோலி
இந்த மாபெரும் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் புக்கிங் சேவையில் ஐஆர்சிடிசி மோனோபோலியாக இருக்கும் காரணத்தால் யாராலும் அசைக்க முடியாத நிலையை அடைந்துள்ளது. இந்த வேளையில் இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது.
1 லட்சம் கோடி ரூபாய்
இன்றைய காலை வர்த்தகத்தில் ஐஆர்சிடிசி பங்குகள் 6,369.30 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்தது மூலம், ஐஆர்சிடிசி நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
சரிவு
ஆனால் வர்த்தகம் முடியும் நேரத்தில் ஐஆர்சிடிசி பங்குகள் 6,369.30 ரூபாயில் இருந்து 4,996.05 ரூபாய்க்கு குறைந்துள்ளது. இதன் மூலம் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டில் இருந்து 85,750 கோடி ரூபாய்க்கு சரிந்துள்ளது.
இதுதான் காரணம்..
ஐஆர்சிடிசி பங்குகளின் இன்றைய சரிவுக்கு ஒரே காரணம் முதலீட்டாளர்களின் லாபம் பார்க்கும் மனநிலை மட்டுமே, சென்செக்ஸ் 62,245 புள்ளிகளில் இருந்து சரிந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் பயத்திலும் லாபத்தை இழக்கக் கூடாது என்பதற்காகவும் ஐஆர்சிடிசி பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.