இந்திய மக்கள் சராசரியாக பயணம் மேற்கொள்வதே அதிகரித்துவிட்டது. வேலைக்காக பயணிப்பது, சுற்றுலா, சொந்த ஊருக்குத் திரும்புவது என பயணங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
இந்த பயணங்களில் பயணிக்கும் முறையில் இன்னும் அதிகம் மாறாத ஒரு விஷயம் ரயில் பயணம் தான். காரணம் பயணச் செலவுகள், மற்ற போக்குவரத்து முறைகளோடு ஒப்பிடும் போது மிகக் குறைவு.
இன்று வரை இந்தியாவின் பெரும்பாலான மக்கள், ரயிலில் முன் பதிவு செய்யாத பெட்டிகளிலேயெ நெரிசலில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன் பதிவு
அதோடு ஓரளவுக்கு சம்பாதிப்பவர்கள் கூட பணத்தை மிச்சப்படுத்த சொகுசு பேருந்துகளில் பயணிக்காமல், ஓரளவுக்கு ஓகேவாக இருக்கும், ரயிலில் ஸ்லீப்பர் க்ளாஸில் பயணம் மேற்கொள்கிறார்கள். அதிலும் சில மாதங்களுக்கு முன்பே டிக்கெட் போட்டு வைப்பது எல்லாம் பழைய கதையாகிவிட்டது. பயணம் மேற்கொள்ள இருப்பதும் அதிக திட்டங்கள் ஏதும் இல்லாமல் சட்டென முடிவு செய்தும் பயணிக்கிறார்கள். இந்த திடீர் பயணங்களுக்கான ஆபத் பாண்டவன் தான் தட்கல்.
தட்கல் சிக்கல்
ஒரு ரயிலில் தட்களில் பயணச் சீட்டு கிடைப்பது எல்லாம், சாட்சாத் அந்த கடவுளே இறங்கி வந்து ஆசிர்வதிப்பதற்கு சமம். தட்களில் பயணச் சீட்டை முன்பதிவு செய்வதற்கான நேரம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மொத்த இருக்கைகள், பெர்த்கள், என எல்லா வகுப்புகளும் கிட்டத்தட்ட நிரம்பி வழியும். அந்த அளவுக்கு தட்களில் டிக்கெட் கிடைப்பது சிக்கலாக இருந்தது.
முறைகேடுகள்
இதை கவனித்த ரயில்வே நிர்வாகம், முறைகேடாக சில மென்பொருளைப் பயன்படுத்தி, தட்கல் பயணச் சீட்டுகள் புக் செய்யப்படுவதைக் கண்டு பிடித்தார்கள். முறையாக ஒருவர் தட்கல் டிக்கெட்டை வேகமாக புக் செய்தால் கூட சுமாராக 2.55 நிமிடங்கள் ஆகுமாம். ஆனால் இந்த முறை கேடான மென் பொருட்கள் வழியாக புக் செய்தால் சுமாராக 1.48 நிமிடங்களில் டிக்கெட்டை புக் செய்து விடலாமாம்.
60 பேர்
இப்படி இந்தியா முழுக்க யார் எல்லாம், 'ANMS', 'MAC', 'Jaguar' போன்ற முறைகேடான மென் பொருளைப் பயன்படுத்தை ரயில் டிக்கெட்களை புக் செய்கிறார்கள் என கண்காணித்து சுமார் 60 பேரைப் பிடித்து இருக்கிறார்களாம். இவர்களைப் போல, முறைகேடான மென் பொருளைப் பயன்படுத்தி டிக்கெட்டை புக் செய்து கொடுப்பவர்களால் தான் பொது மக்களுக்கு தட்கல் அதிக நேரம் கிடைப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
வியாபாரம்
இந்த முறைகேடான மென்பொருட்கள் வழியாக, டிக்கெட் புக் செய்யும் வியாபாரம் வழியாக, ஒவ்வொரு ஆண்டும், சுமார் 50 - 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்து கொண்டு இருந்ததாகவும் சொல்கிறார்கள். இந்த அதிரடி நவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்து இருப்பதாகவும் ரயில்வே நிர்வாக தரப்பினர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
முழு சுத்தம்
இப்போது இந்திய ரயில்வேஸில், ஒரு டிக்கெட் கூட முறைகேடான மென் பொருட்கள் வழியாக புக் செய்யப்படவில்லை என ரயில்வே பாதுகாப்புப் படையினரின் இயக்குநர் பெருமையாகச் சொல்லி இருக்கிறார். வெறும் வாய் வார்த்தையாகச் சொல்லாமல் சில தரவுகளையும் காட்டி இருக்கிறார்கள்.
தரவுகள்
கடந்த நவம்பர் 11, 2019, சனிக்கிழமை சம்பூர்ன க்ராந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் தட்கல் டிக்கெட்டுகள், வெறும் 4 - 5 நிமிடங்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால் பிப்ரவரி 10, 2020, திங்கட்கிழமை, அதே ரயிலுக்கான தட்கல் சுமார் 10 மணி நேரங்களுக்கு மேல் கிடைத்தது என்கிறது ரயில்வே நிர்வாகம். இது போல இன்னும் சில எடுத்துக்காட்டுகளையும் சொல்லி இருக்கிறார்கள்
இனி தட்கல்
எனவே மக்களே, இனி ரயில் பயணத்துக்கு தட்கல் எல்லாம் சரிப்பட்டு வருமா..? என யோசிக்காமல் ஒரு முறை தட்களில் டிக்கெட் போட முயற்சி செய்யுங்கள். ரயில்வே நிர்வாகம் தன்னால் முடிந்த வரை சிறப்பாக செயலாற்றி, தட்கல் கிடைக்கும் நேரத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். அரசு சொல்வது போல, நீண்ட நேரம் தட்கல் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. டிக்கெட் கிடைத்தால் நல்லது தானே. அதிக உடல் அலுப்பு இல்லாமல் சாவகசமக ஊர் போய்ச் சேரலாமே.