தீபாவளி பண்டிகை நெருக்கும் நிலையில் பல மாநிலங்களில் ஷாப்பிங் செய்வதில் கடுமையான கட்டுப்பாடுகள், பட்டாசு வெடிக்கத் தடை என அதிரடி விதிக்கப்படும் அதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரமும், வர்த்தகச் சந்தையும் இந்திய தீபாவளி பண்டிகையை நம்பி தான் உள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான Dhanteras நாளில் தங்கம் வாங்குவது வட இந்தியாவிலும், தென் இந்தியாவில் சில குறிப்பிட்ட மக்களும் வாடிக்கையாகவும், பழக்கமாகவும் வைத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் தீபாவளி கொண்டாட்ங்கள் குறைந்தாலும் பழக்க வழக்கங்களைக் கைவிட யாருக்கும் மனம் இருக்காது. எனவே Dhanteras நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும், மன நிம்மதி அதிகரிக்கும், மகிழ்ச்சி பொங்கும் என்பது பெருவாரியான மக்களால் நம்பப்படுகிறது.
தங்கம் விலை அதிகமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில் Dhanteras நாளில் தங்கம் வாங்குவது சரியா..? லாபம் கிடைக்குமா..? என்பது தற்போது பல கோடி மக்களின் கேள்வியாக உள்ளது.
தீபாவளி
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது ஆடை, பட்டாசு, தின்பண்டங்களின் விற்பனை அதிகமாக இருப்பது போல் தீபாவளிக்கு முந்தைய நாள் தங்கத்தின் விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே தீபாவளி பண்டிகை மாதத்தில் அதிகளவிலான தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவது வழக்கம்.
இதேபோல் இந்த ஆண்டும் தங்கம் அதிகளவில் விற்பனை சந்தைக்கு வந்துள்ளது.
தங்கம் விலை
அமெரிக்கத் தேர்தல் முடிவுகளும், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அறிவிப்புகளும் தங்கத்தின் விலையைல நேரடியாகப் பாதித்துள்ளது. கொரோனா மருந்து கண்டுபிடிப்பின் எதிரொலியாக இந்தியச் சந்தையில் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் 5 சதவீதம் சரிவில் சுமார் 2,500 ரூபாய் சரிந்து 49,659 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலை 6 சதவீத சரிவில் சுமார் 4000 ரூபாய் சரிந்து ஒரு கிலோ வெள்ளி 61,384 ரூபாய்க்கு வர்த்தகமானது.
புதன் கிழமை விலை
இந்தியச் சந்தையில் டிசம்பர் மாதத்திற்கான ஆர்டர்களின் விலையில் 10 கிராம் தங்கத்தின் விலை 0.31 சதவீதம் சரிந்து 50,344 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இதேபோல் வெற்றி 1 சதவீதம் வரையில் சரிந்து 62,416 ரூபாயாகச் சரிந்துள்ளது.
விலை குறைய வாய்ப்புகள் அதிகம்
அமெரிக்கத் தேர்தல் முடிவுகளும், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அறிவிப்புகளும் முதலீட்டுச் சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனத் தங்கம் மற்றும் வெள்ளி மீது செய்யப்பட்ட முதலீடுகள் அனைத்தும் தற்போது திரும்பவும் பங்குச்சந்தை பக்கம் திரும்பும் நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வருகிறது.
முதலீடு செய்வது சரியா..?
கொரோனா பாதிப்பு வல்லரசு நாடுகளில் அதிகரித்து வந்தாலும், பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையை மேம்படுத்த பல ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாக்கான மருந்தும் தயாராகி வருகிறது.
இதனால் பங்குச்சந்தையில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என அனைத்துத் தரப்பு மக்களாலும் நம்பப்படுகிறது. இதனால் தங்கம் விலை சரியவும் வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் மாத ஆர்டர்கள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இந்தியச் சந்தைக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உருவாகியது. இதன் வாயிலாக அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் 6000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தொகையை இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
இதன் காரணமாகவே டிசம்பர் மாதத்திற்கான தங்கம் மற்றும் வெள்ளி ஆர்டர்கள் இன்று சரிவைச் சந்தித்துள்ளது.
தங்கம் தேவை
இந்தியாவில் தங்கம் வாங்குவதிற்கு முதலீடு மட்டும் காரணம் இல்லை. இந்திய மக்களுக்குத் தங்கத்தின் தேவை பல வகையில் உள்ளது திருமணம், தங்க நகைகள், கிப்ட், இன்னும் பல.
இதனால் தேவைக்காக வாங்குவதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, ஆனால் லாப நோக்கத்திற்காக வாங்க திட்டமிட்டால் சந்தை நிலவரத்தை முழுவதுமாகத் தெரிந்துகொண்டு தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்.