ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), சர்வதேச வர்த்தகம், பட்ஜெட் திட்டங்கள் போன்ற பொருளாதார அம்சங்களை அளவிடுவதன் மூலம் கணக்கிடலாம்.
பொருளாதார அறிஞர்கள் மேற்கண்ட அம்சங்களை கணக்கில் கொண்டு ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளதா? அல்லது பின் தங்கியுள்ளதா? என்பதை அளவிடுவர்.
ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிட நீங்கள் எப்போதாவது உள்ளாடைகளை பயன்படுத்தியுள்ளீர்களா? நாட்டு மக்கள் அணியும் உள்ளாடைக்கும் பொருளாதாரத்திற்கும் சம்பந்தம் உண்டா? இதுகுறித்து தற்போது பார்ப்போம்.
உள்ளாடையில் பொருளாதாரம்
உள்ளாடைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை அளவிடுவது விசித்திரமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்குப் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஒரு நாடு பொருளாதார ரீதியாக நன்றாக செயல்படாத போதெல்லாம், உள்ளாடைகளின் விற்பனையும் வீழ்ச்சியடைகிறது என்பது உண்மையாக உள்ளது.
பணத்தை மிச்சப்படுத்த
கடினமான காலத்தில் மக்கள் பணத்தை மிச்சப்படுத்த, தேவையான பொருட்களுக்கு மட்டுமே செலவிட விரும்புவர். நீங்கள் என்ன உள்ளாடைகள் உள்ளே அணிந்திருக்கிறீர்கள் என்பது உங்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. எனவே மக்கள் பணக்கஷ்டம் நேரிடும்போது பழைய, தளர்வான எலாஸ்டிக் மற்றும் துளைகள் உள்ள உள்ளாடைகளை கூட அணிந்து கொள்வார்கள். ஆனால் அதே நேரத்தில் மற்ற ஆடைகளில் கவனம் செலுத்தி கொள்வார்கள்.
தாராளமான பணம்
ஆனால் அதே நேரத்தில் மக்கள் பணம் தாராளமாக கையில் இருக்கும்போது, உயர்ரக உள்ளாடை விற்பனை செழிக்கும். பழைய உள்ளாடைகளை தூக்கி போட்டுவிட்டு புதிய, விலையுயர்ந்த நல்ல உள்ளாடைகளை வாங்குவர்.
பொருளாதார கோட்பாடு
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான்தான் இந்த கோட்பாட்டை கண்டுபிடித்தார். ஆண்கள் பொதுவாக தங்கள் நிதியை நிர்வகிக்க சிரமப்படும்போது உள்ளாடைகளை வாங்குவதை தவிர்க்கிறார்கள் என்றும், பொருளாதாரத்தின் அம்சம் உயரும் போது, அவர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய உள்ளாடைகளை வாங்கி குவிக்கின்றார்கள் என்றும், எனவே ஒரு நாட்டின் உள்ளாடை விற்பனையை வைத்தே அந்நாட்டு மக்களின் பணப்புழக்கம் மற்றும் பொருளாதாரத்தை அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
உள்ளாடை விற்பனை
இதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால் உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது உள்ளாடைகளின் விற்பனை குறைந்தது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் உள்ளாடைகளின் விற்பனை அதிகரித்தது.
ஆண்களின் உள்ளாடை
இந்தியாவில், லக்ஸ் கோசி, டாலர் மற்றும் ரூபா போன்ற உள்ளாடைகளை விற்பனை செய்யும் சிறந்த பிராண்டுகள், நிதி நெருக்கடியின் போது விற்பனை கடுமையாகக் குறைகிறது என்று தெரிவிக்கின்றன. 2019ஆம் ஆண்டு தீபாவளியின் போது, ஆடை விற்பனையில் ஏற்றம் காணப்பட்டதாகவும், ஆனால் உள்ளாடைகளைப் பொறுத்தவரை, விற்பனை மிக குறைவாக இருந்ததாகவும் கூறப்பட்டது.
சரியான முடிவா?
மேக்வாரி பல்கலைக்கழக வணிகப் பள்ளியில் பயிற்றுவிக்கும் இணைப் பேராசிரியரான ஜனா பவுடன் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, 'கோவிட் 19 உச்சத்தில் இருந்த காலத்தில், அனைவரும் மாஸ்க் அணிந்ததால், லிப்ஸ்டிக் போன்ற அழகுசாதனப் பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது. எனவே, பொருளாதாரம் கடினமான காலத்தை எதிர்கொள்கிறது என்று சொல்லலாமா? இல்லை, ஏனெனில் அதே நேரத்தில், விளையாட்டு ஆடைகளின் விற்பனை அதிகரித்தது. எனவே, உள்ளாடைகள் விற்பனை குறைந்தால் அதை ஒரு குறியீடாக கொள்ளலாமே தவிர, பொருளாதாரத்தை தீர்மானிக்க அதை பயன்படுத்துவது சரியான முடிவு இல்லை' என்றார்.