இறப்பு என்பது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இது நடக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் இறந்தவருடைய குடும்பம் இக்கட்டான சூழ்நிலையை தான் எதிர்கொள்ளும். அதுவும் இறந்தவர் ஒரு ஆணாக இருந்து, அவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருந்தால் அந்த குடும்பம் படும் வேதனையை சொல்லி மாளாது. இது போன்ற சூழ்நிலையில் இறந்தவருடைய ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அவசர தேவைகளுக்கு அவருடைய குடும்பத்தினர் பணம் எடுப்பது பொதுவான ஒன்று. சிலர் இதற்காக யூபிஐ மற்றும் அவருடைய கூகுள் பே, போன் பே போன்றவற்றையும் பயன்படுத்துவார்கள்.
இறந்தவர் நம் சொந்தம் தானே.. இதில் என்ன தவறு இருக்கிறது? என்று நீங்கள் யோசித்தால் அங்கு தான் பிரச்சனை. ஏனெனில் சட்டம் இதற்கு வேறு விதிகளை வகுத்துள்ளது. வங்கி விதிகளின்படி நீங்கள் இறந்தவருடைய ஏடிஎம் கார்டு, போன் பே, கூகுள் பே போன்றவற்றை பயன்படுத்துவது சட்டவிரோதமான செயலாகும். ஒருவேளை இறந்தவருடைய அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்க வேண்டுமானால் அதை சட்டபூர்வமாக தான் அணுக வேண்டும். அது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
வங்கிகளைப் பொறுத்தவரை இறந்தவரின் ஏடிஎம் பின்னை பயன்படுத்தி பணம் எடுப்பது என்பது ஏமாற்று வேலையாக கருதப்படுகிறது. உதாரணமாக இறந்தவர் அவருடைய வங்கி கணக்கிற்கு ஒரு நாமினியை நியமித்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் நாமினியாக இருந்து பணம் எடுத்தாலும் தவறுதான். அதற்கும் முறையாக வங்கியிடம் சென்று உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகே இறந்தவரின் பணத்திற்கு நீங்கள் பொறுப்பேற்க முடியும். இதையெல்லாம் செய்யாமல் நீங்கள் பணம் எடுத்துக் கொண்டே இருந்தால் வங்கி உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும். அதோடு நீங்கள் சிறை செல்லவும் நேரிடலாம்.

இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத துயரம் தான். ஆனாலும் எல்லா விஷயங்களையும் சட்டபூர்வமாக அணுகுவது தான் அனைவருக்கும் நல்லது. இதனால் பின்னாளில் எந்த சிக்கலும் வராமல் இருக்கும். நீங்கள் சட்டபூர்வமாக எதையும் செய்யவில்லை என்றால் ஏற்கனவே பிடித்தவரை இழந்திருக்கும் சூழலில், மீண்டும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு மன உளைச்சல் தான் அதிகரிக்கும்.
மேலும் வங்கியின் விதிகளைப் பின்பற்ற நீங்கள் பெரிதாக கஷ்டப்படத் தேவையில்லை. வங்கி சொல்லும் சில விஷயங்களை மட்டும் செய்தால் போதுமானது. இறந்தவர் வங்கி கணக்கு நிறைய பணம் இருக்கிறது என்றால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அவர் எந்த கிளையில் வங்கி கணக்கு வைத்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வது. அதன் பிறகு அங்கு சென்று மேனேஜரிடம் நடந்ததை கூறி டெத் சர்டிபிகேட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கியில் இறந்தவர் நியமித்த நாமினிக்கு ஒரு ஃபார்ம் கொடுக்கப்படும் அந்த ஃபார்மை சரியாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். ஏமாற்று வேலைகளைத் தடுப்பதற்காக உண்மையிலேயே கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டாரா என்பதை வங்கிகளுக்கு விளக்க அவருடைய டெத் சர்டிபிகேட் தேவை. பின்னர் நாமினியின் ஆதார் கார்டு, பான் கார்டு, அக்கவுண்ட் நம்பர் போன்றவற்றையும் இணைத்து வழங்க வேண்டும். நீங்கள் கொடுத்திருக்கும் ஆவணங்கள் அனைத்தும் உண்மையானது தானா என்ற வெரிஃபிகேஷன் வங்கியின் மூலமாக நடக்கும். அதன் பிறகு இறந்தவரின் கணக்கில் இருக்கும் பணம் முறையாக நாமினியின் அக்கவுண்டுக்கு மாற்றப்படும்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் இது போன்ற சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. எனவே சட்டங்களை மதித்து நடப்பது அவசியம். ஏற்கனவே மோசடி சம்பவங்கள் அதிகரித்து லட்சங்களில் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இதை தடுப்பதற்காகவே வங்கிகள் இதுபோன்ற விதிகளை வகுக்கின்றன என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள்!


Click it and Unblock the Notifications