இந்தியாவில் புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது, ஏற்கனவே இருக்கும் நோட்டுகளை மதிப்பிழக்க செய்வது போன்ற முக்கிய முடிவுகளை ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் தான் எடுக்கும். இந்நிலையில் இந்தியாவில் கூடிய விரைவில் 5000 ரூபாய் நோட்டு வெளியாகப் போகிறது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி நவீனமான முறையில் இந்த 5000 ரூபாய் நோட்டினை வடிவமைப்பு செய்திருப்பதாகவும், அதன் வடிவம் இறுதி செய்யப்பட்டு அச்சிடும் நிலையில் இருப்பதாகவும் விரைவில் இது புழக்கத்திற்கு வரப்போகிறது என்றும் பல்வேறு சமூக வலைதளங்களிலும் தகவல்கள் வேகமாக பரவிய வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில் இது உண்மையா பொய்யா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அரசுக்கு சொந்தமான PIB fact check பிரிவினர் 5000 ரூபாய் நோட்டு தொடர்பான தகவல் உண்மையா பொய்யா என்பது குறித்து விளக்கம் தந்திருக்கின்றனர். ஆர்பிஐ தரப்பிலோ மத்திய நிதி அமைச்சகம் தரப்பிலோ இதுவரை 5,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் மக்கள் குழப்பம் அடைந்த நிலையில் தான் PIB நிறுவனம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது உண்மையா பொய்யா என்பதை விவரித்து இருக்கிறது .
5000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக பரவக்கூடிய புகைப்படமும் தகவல்களும் முற்றிலும் தவறானது ஆதாரமற்றது என தெரிவித்திருக்கிறது . இந்தியாவில் 5,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது தொடர்பான எந்த ஒரு முடிவையும் இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை எடுக்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எனவே இது ஒரு போலியான செய்தி பொதுமக்கள் இதனை கண்டு ஏமாந்து விட வேண்டாம் என தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம், புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது என்றால் ஆர்பிஐ தரப்பில் நிச்சயம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் பரவும் 5000 ரூபாய் நோட்டுகளின் படங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் போலியாக உருவாக்கப்பட்டவை என கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் தற்போதைய நோக்கம் டிஜிட்டல் பேமெண்ட்களை ஊக்குவிப்பது ,பணப்பரிவர்த்தனைகளை குறைத்து பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகர்வதுதான் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . எனவே தற்போதைக்கு 5000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் எண்ணம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு கிடையாது , பொதுமக்கள் இந்த செய்திகளை கண்டு ஏமாற வேண்டாம் யாரேனும் போலியாக ரூபாய் நோட்டுகளை தந்து ஏமாற்ற முற்பட்டாலும் அதனை நம்பாதீர்கள் என தெரிவித்திருக்கிறது. ரூபாய் நோட்டுகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் ரிசர்வ் வங்கி தன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும் என்றும் எப்போதும் அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் வெளியாகும் தகவல்களை மட்டுமே நம்புங்கள் என கூறியுள்ளது


Click it and Unblock the Notifications