இந்திய டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் சேவை குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய மிக முக்கியமான காரணம் என்றால் அதற்கு முக்கியக் காரணம் ஆர்பிஐ தலைமையில் NPCI அமைப்பு உருவாக்கிய யூபிஐ செயல்பாடுகள் தான்.
யூபிஐ பரிவர்த்தனை முறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவதால் இந்தியாவில் சேவையைத் தற்போது உலகில் பல நாடுகள் வாங்கிப் பயன்படுத்தத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் ஆர்பிஐ யூபிஐ சேவை தொடர்பாக முக்கிய முடிவை எடுக்க முடிவு செய்துள்ளது.
UPI பரிவர்த்தனைகள்
இந்தியாவில் ஜூலை 2016 இல் UPI பரிவர்த்தனைகளின் மதிப்பு 38 லட்சம் மட்டுமே, ஆனால் ஜூலை 2022 இல் UPI பரிவர்த்தனை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய்.
இந்தியாவில் UPI சேவை பெரிய அளவில் பிரபலமாக 2 விஷயங்கள் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
1. அனைத்து தரப்பினரும் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வசதி
2. இவ்வளவு சிறப்புமிக்கச் சேவை இலவசமாகக் கிடைப்பது தான்.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு
நீங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வைத்து ஒரு கடையில் நீங்கள் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு முறையும் சிறிய தொகையை (வணிகரிடம் இருந்து) வங்கிகள் எடுத்துச் செல்கின்றன. இதைத் தான் Merchant Discount Rate (MDR) என்று அழைக்கப்படுகிறது.
எல்லாமே இலவசம்
UPI இல் MDR இல்லை, எல்லாமே இலவசம். அதனால் தான் வணிகர்கள் மற்ற கட்டண முறைகளை விட யூபிஐ சேவையை அதிக விரும்புவது மட்டும் அல்லாமல் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
இது வணிகர்களுக்குச் சிறந்ததாக இருந்தாலும், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) இதில் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. ஏன் தெரியுமா..?
NPCI அமைப்பு
NPCI அமைப்பு தான் UPI தளத்தை உருவாக்கியவர்கள். இந்த அமைப்பு மத்திய அரசின் கீழ் இயக்கும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாக இருந்தாலும், இந்த யூபிஐ சேவை தளத்தில் சில செலவுகளைச் சமாளிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. எனவே இந்தக் கட்டணமில்லாத கொள்கை உண்மையில் ஒரு வேதனையான இடமாக மாறி வருகிறது.
800 ரூபாய்-க்கு 2 ரூபாய்
ரிசர்வ் வங்கியின் சொந்தக் கணக்கீடுகளின் படி - நீங்கள் ஒரு கடைக்காரருக்கு UPI மூலம் 800 ரூபாய்ச் செலுத்தினால், யூபிஐ கட்டமைப்பை இயங்கும் வங்கிகள், NPCI மற்றும் பேமெண்ட் சேவை வழங்குபவர்கள் ஆகியோருக்கு சுமார் 2 ரூபாய் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
1250 கோடி ரூபாய் செலவு
எனவே UPI பரிவர்த்தனைகளின் மிகப்பெரிய பணப் பரிமாற்றத்தை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டால், NPCI அமைப்பு ஒவ்வொரு மாதமும் 1250 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்து வருகிறது. இது மிகப்பெரிய தொகை, இதனால் எத்தனை நாள் அதிகப்படியான தொகை இழந்து இலவச சேவை அளிக்க முடியும் என்ற கேள்வி வருகிறது.
ரிசர்வ் வங்கி
இந்நிலையில் இந்தியாவின் கட்டணச் சூழல் அமைப்பு பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கையை விளக்குகிறது. மேலும் பொது மக்களிடம் இருந்து சில முக்கியமான கேள்விக்குக் கருத்தும் கேட்டும் உள்ளது.
மொத்தம் 3 கேள்விகளை ஆர்பிஐ இந்திய மக்களிடம் கேட்டு உள்ளது.
3 கேள்விகள்
1. UPI இல் கட்டணம் இருந்தால், அது நிலையான கட்டணமாக வேண்டுமா அல்லது பரிவர்த்தனையின் மதிப்பின் அடிப்படையில் வேண்டுமா?
2. ஒரு கட்டணம் இருந்தால், அதை யார் தீர்மானிப்பது ரிசர்வ் வங்கியா அல்லது சந்தையில் இருக்கும் நிறுவனங்களா?
3. மேலும் கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை என்றால், அதற்கு அரசாங்கம் மானியம் வழங்க வேண்டுமா?
இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் விளக்கியுள்ளது.