பல ஆண்டுகள் திட்டமிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உட்பட அனைத்து நாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகள், தடைகளை விதித்து வருகிறது.
இந்தத் தடைகள் அனைத்தையும் மீறி உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்ய ரஷ்யா கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களிடம் இருந்து பணத்தைச் சம்பாதிக்கவும், அரசு தளத்தை முடக்கவும் சைபர் க்ரைம்-ஐ முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
அட அதே மாதிரி தானே வட கொரியாவும் செய்தது.. அப்போ ரஷ்யா, வட கொரியாவை பின்பற்ற போகிறதா..
வட கொரியா கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரியா உலக நாடுகள் மத்தியில் தனது ஆதிக்கத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகப் பல கட்டுப்பாடுகளை மீறி அணு ஆயுத பரிசோதனை செய்தது. இதை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும் வட கொரியா மீது கடுமையான கட்டுப்பாடுகளையும் தடைகளை விதித்தது.
அணு ஆயுதம் தயாரிப்பு
இதனால் உலக நாடுகளின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட வட கொரியா அரசு, வெளிநாடுகளில் அதிகப்படியான சைபர் க்ரைம் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து அணு ஆயுதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களுக்கு நிதியுதவி செய்தது.
வட கொரியா பொருளாதாரம்
மேலும் வட கொரியாவின் பொருளாதாரத்தின் பலவீனம், அந்நாட்டு அரசை கள்ளநோட்டு, போதை மருந்து தயாரிப்பு போன்ற பல்வேறு சர்வதேச குற்றச் செயல்களுக்கு நிதியுதவி செய்வதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யா மீதும் தடை
தற்போது ரஷ்யா மீதும் கிட்டத்தட்ட இதேபோன்ற தடைகளைத் தான் உலக நாடுகள் விதித்து வருகிறது, ஆனால் காரணம் வேறு. வட கொரியாவை போல் அல்லாமல் ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் மிகவும் சிறப்பாகவே உள்ளது.
புதின் கோபம்
ஆனால் உலக நாடுகள் மீது உள்ள கோபம் காரணமாக, ரஷ்யா தனது முக்கியப் பலமான டெக்னாலஜியை பயன்படுத்தி வல்லரசு நாடுகள் மீது கடுமையான சைபர் அட்டாக் நடத்துமா என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் உருவாகியுள்ளது.
சைபர் க்ரைம் ஆயுதம்
உலகளாவிய அன்டர்கிரவுன்ட் சைபர் க்ரைம் உலகம் ரஷ்யாவுடன் குறிப்பிடத்தக்க அளவிலான தொடர்பைக் கொண்டுள்ளது யாராலும் மறுக்க முடியாது. ரஷ்யாவின் சட்ட அமைப்பு கூட இதற்குச் சாதமாக உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி என்ன சட்டம் சைபர் க்ரைம் -க்கு வழிவகுக்கிறது என்று தானே கேட்குறீங்க..
ரஷ்ய சட்ட அமைப்பு
ரஷ்ய சட்ட அமைப்பில், இந்நாட்டின் குடிமக்கள் வெளிநாட்டில் செய்யப்படும் குற்றங்கள், ஊழல்களுக்குப் பிற நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளுக்குக் கைது செய்ய அனுமதி அளிப்பது இல்லை. பாதுகாப்பு சேவைகளை அனுமதிக்காது. இதனால் இந்நாட்டின் அதிகப்படியாகச் சைபர் க்ரைம்-ல் ஈடுபடுகின்றனர்.
ransomware தாக்குதல்
Chainalysis நிறுவனத்தின் ஆய்வுகள் படி, கடந்த ஆண்டு உலக நாடுகளில் நடந்த ஒட்டுமொத்த ransomware தாக்குதலில் கிடைத்த வருமானத்தில் 74 சதவீதம் ரஷ்ய அமைப்புகளுக்குச் சென்றுள்ளது. ரஷ்ய சைபர் க்ரைம் குரூப்கள் மிகவும் திறம்பட இந்த ransomware தாக்குதலை நடத்துகின்றனர். இதனால் இதைத் தடுப்பது என்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது எனச் சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டு
மேற்கத்திய நாடுகள் அவ்வப்போது ரஷ்யா அரசும், சைபர் க்ரைம் குரூப்களும் கூட்டணிகள் எனக் குற்றம் சாட்டி வரும் நிலையில், கடந்த ஆண்டுச் சில ransomware குரூப்கள் ரஷ்ய அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் அளிக்க உள்ளதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.
Conti - சைபர் க்ரைம் குரூப்
இதை ரஷ்யா மீதான நாட்டுப்பற்று உணர்வில் அறிவிக்கப்பட்டதா அல்லது ரஷ்ய அரசே சைபர் க்ரைம் குரூப்களை மிரட்டி இதைச் செய்யச் சொன்னதா என்றும் தற்போது கேள்வி எழுப்பட்டு உள்ளது. அதேவேளையில் Conti என அறியப்படும் சைபர் க்ரைம் குரூப் மிக முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது.
Conti குரூப் எச்சரிக்கை
ரஷ்யாவிற்கு எதிராக யாரேனும் சைபர் தாக்குதல் அல்லது ஏதேனும் போர் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய முடிவு செய்தால், எதிரியின் முக்கியமான உள்கட்டமைப்புகளைத் தாக்குவதற்கு அனைத்து வளங்களையும் வழிகளையும் பயன்படுத்துவோம் என இந்த Conti சைபர் க்ரைம் குரூப் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து Conti சைபர் க்ரைம் குரூபின் சக போட்டி அமைப்புகள் பல உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தது.
எல்லாம் பயம்
மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்தாலும் தொடர்ந்து அச்சத்திலேயே உள்ளது. இதற்குப் பல காரணங்கள் உண்டு, ஒருப்பக்கம் புதின் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது, இதனால் எப்போது வேண்டுமானாலும் 3ஆம் உலகப் போரை புதின் துவங்க வாய்ப்பு இருக்கும் காரணத்தால் ரஷ்ய படைகளை இதுவரை எந்தொரு வெளிநாட்டு படையும் தாக்கவில்லை.
அணு ஆயுதம் முதல் சைபர் அட்டாக் வரை
இதேபோல் புதின் அணு ஆயுத போரை துவங்கினால் வல்லரசு நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. மேலும் சைபர் அட்டாக் என்னும் மிக ஸ்மார்ட்டான ஆயுதம் ரஷ்யாவிடம் உள்ளது. இதனால் ரஷ்யா குறித்தும், புதின் குறித்தும் பேசுவதற்கும் தயக்கம் காட்டும் பல அதிபர்கள் உள்ளனர்.