இன்றைய மோசடி சம்பவங்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. புதுப்புது டிரிக்கைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அப்படித்தான் உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தி உங்களுக்கு தெரியாமலேயே சிலர் மொபைல் நம்பர் பெற்றிருக்கவும் வாய்ப்புள்ளது. மத்திய தொலைதொடர்பு துறை விதிகளின்படி ஒரு நபர் 9 சிம்கார்டுகள் வரை பெற அனுமதி இருக்கிறது.
அடையாள மோசடிகள் அதிகமாக நடப்பதால் உங்கள் ஆதார் கார்டை வைத்து இது போன்ற சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. எனவே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டு பயன்பாட்டில் இருக்கிறது என்பதை அவ்வப்போது சரிபார்ப்பது தேவையற்ற சிக்கலைத் தவிர்க்க உதவும்.

ஒவ்வொரு முறையும் டெலிகாம் நிறுவனங்கள் நீங்கள் புதிய சிம்கார்ட் வாங்கும் போது உங்களிடம் முதலில் கேட்பது ஆதார் கார்டைத் தான். எனவே உங்கள் பெயரில் எத்தனை சிம்கார்டுகள் பெறப்பட்டுள்ளது என்பதை அடிக்கடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்காகத்தான் டெலிகாம் நிறுவனங்கள் ஆதார் கார்டை அடையாளச் சான்றாக ஏற்றுக் கொள்கின்றன. இவ்வளவு முக்கியமாக இருக்கும் ஆதார் கார்டு விபரங்கள் தவறான நபர்களின் கையில் கிடைத்தால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும். இன்றைய மோசடிக்காரர்கள் பிறரின் அடையாள ஆவணங்களை அதிகம் பயன்படுத்தி மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதிலும் புதிய சிம்கார்ட் பெறுவது, வேறு ஒருவரின் ஆதார் பான் நம்பரை வைத்து நிறுவனம் தொடங்கி மோசடி செய்வது என பல விஷயங்களைச் செய்து வருகின்றனர்.
இதைத் தடுப்பதற்கு மத்திய அரசு சஞ்சார் சாதி (Sanchar Saathi) என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. இதில் (TAFCOP) டெலிகாம் அனலிட்டிக்ஸ் ஃபார் பிராடு மேனேஜ்மென்ட் அண்ட் கன்ஸ்யூமர் புரொடக்சன் சேவை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பெறப்பட்டுள்ளது என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு தெரியாத நம்பரை யாராவது வாங்கி இருந்தால் அதை பிளாக் செய்யலாம்.
ஆதார் நம்பரில் எத்தனை மொபைல் நம்பர் ஆக்டிவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது எப்படி?: முதலில் சஞ்சார் சாதி என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு உங்களுடைய 10 டிஜிட் மொபைல் நம்பரை வழங்க வேண்டும். பின்னர் கேப்ட்சா குறியீட்டை வழங்கி ஓடிபி சரிபார்ப்பு செயல் முறையை செய்ய வேண்டும். இந்த செயல்முறை முடிந்ததும் உங்களுடைய ஆதாரில் எத்தனை மொபைல் நம்பர் பெறப்பட்டிருக்கிறது என்பது காண்பிக்கப்படும்.
அதில் உங்களுக்கு தெரியாத நம்பர் இருந்தால் உடனடியாக அந்த தளத்தின் மூலமாகவே ரிப்போர்ட் செய்யலாம். இன்றைய சூழலில் வங்கி சேவைகள், டிஜிட்டல் பண பரிவர்த்தனை, சோசியல் மீடியா கணக்குகள் மற்றும் பிற ஆன்லைன் சேவைகளுக்கு மொபைல் நம்பரை பயன்படுத்துகிறோம். எனவே உங்கள் பெயரில் மொபைல் நம்பரை பெற்று பிற விஷயங்களுக்கு மோசடியாக பயன்படுத்தினாலும் அது உங்களை தான் பாதிக்கும்.
இதற்காக அரசு சிம் கார்டு விதிகளிலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தான் ஒரு நபர் ஒன்பது சிம் கார்டுக்கு மேல் வாங்க முடியாது. அதேபோல் யாராலும் மொத்தமாக சிம் கார்டு வாங்க முடியாது. அரசு சிம் கார்டு விதிகளில் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தாலும் அவ்வப்போது இணையதளத்தை பயன்படுத்தி உங்களுடைய பெயரில் சிம் கார்ட் பெறப்பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இதனால் பிற்காலத்தில் பிரச்சினை ஏற்படாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications

