ஒரு காலத்தில் ஐடி வேலை என்றால் அது வாழ்க்கைக்கான செட்டில்மென்ட் கேரண்டியாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமையே வேறு. 2025ல் ஆட்குறைப்பு என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளன. குறிப்பாக பல ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துள்ளன. இது ஐடி துறை உள்ளிட்ட பல துறையினரிடையே மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றின் அசுர வளர்ச்சியே முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
உண்மையில் பல ஆயிரம் பேர் வேலை இழந்ததற்கான காரணம் தான் என்ன, நிறுவனங்கள் ஏன் தங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள்கின்றன. இனி ஐடி துறையில் நிலைத்து நிற்க கோடிங் மட்டும் போதுமா அல்லது புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டுமா, 2025ல் வந்த இந்த மாற்றங்கள் என்ன தான் சொல்ல வருகிறது, வாருங்கள் பார்க்கலாம்.

ஏன் பணி நீக்கம்? இனியாவது மீளுமா?
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் ஐடி துறையானது நடப்பு ஆண்டில் பற்பல் சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றத்தை சந்தித்துள்ளது. இது தற்காலிகமான ஒரு நிலை அல்ல. ஒரு சகாப்தத்தின் முடிவு என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 2024ல் தொடங்கிய பணி நீக்க நடவடிக்கையானது, 2025ல் உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட பல நிறுவனங்களும் பணி நீக்கம் என்ற கசப்பான முடிவை எடுத்துள்ளன.
சர்வதேச நிறுவங்களான மைக்ரோசாப்ட், PwC, மெட்டா, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களும் கணிசமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இவற்றோடு சிறு நிறுவனங்கள், ஸ்டார்டப் நிறுவனங்களும் பணி நீக்கம் செய்துள்ளன.
ஐடி நிறுவனங்கள் தற்போதைய சூழலில் வேலையை வேகப்படுத்த செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷனில் அதிகளவில் முதலீடுகளை செய்கின்றன. ஆக அதிக சம்பளம் கொடுத்து ஆட்களை வைத்து ஒரு வேலையை செய்வதற்கு பதில், தொழில்நுட்பங்கள் மூலம் விரைவில் செய்ய முற்படுகின்றன. அதோடு குறுகிய காலத்தில் செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரிக்கவும் பணி நீக்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதனால் ஐடி துறை உள்ளிட்ட பல துறைகளில் வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் குறைந்துள்ளன.
ஐடி நிறுவனங்களின் இந்த முடிவால், ஒரு காலத்தில் மாஸ் ஹையரிங் என்ற பெயரில் ஆட்களை தேடி தேடி பணிக்கு அமர்த்திய சூழல் மாறியுள்ளது. குறிப்பிட்ட நிபுணத்துவம் பெற்றவர்களை பணியில் அமர்த்தும் நிலை உருவாகிவிட்டது. இதனால் பலருக்கும் புதிய வாய்ப்புகள் கிடைப்பதிலும் சிக்கல் உருவாகியுள்ளது.
நிச்சயமற்ற சூழல்?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் என பலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழலை எதிர்கொண்டுள்ளன. இதனால் ஐடி துறையின் தேவையானது பெரிய அளவில் குறைந்துள்ளது. சில பிரிவுகளில் தேவையே இருந்தாலும் கடினமான சூழலில் இருக்கும் நிறுவனங்கள், புதிய திட்டங்களில் முதலீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆக முதலீடுகளை தற்காலிகமாக நிறுவனங்கள் தள்ளி வைத்துள்ளன. இது இந்திய ஐடி நிறுவனங்கள் உள்பட பலவற்றிற்கும் பின்னடைவையே கொடுத்துள்ளன.
2025 என்ன சொல்கிறது?
நடப்பு ஆண்டானது நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். மாற்றத்திற்கு எப்போதும் தயாராக இருங்கள். இனி ஐடி வேலை என்பது ஒரு பாதுகாப்பான ஒன்று அல்ல. ஊழியர்கள் தங்களை தொடர்ந்து அப்டேட்டாக வைத்துக் கொண்டால் மட்டுமே, ஐடி துறையில் நீடிக்க முடியும். புதிய ஏஐ சகாப்தத்தில் வெற்றி கொடியை நாட்ட முடியும். ஐடி துறை மட்டுமல்ல, ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து அப்டேட்டாக வைத்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications