உலகளவில் ரெசசன் வரலாமோ என்ற அச்சத்தின் மத்தியில் பல்வேறு டெக் நிறுவனங்களும் பணியமர்த்தலை குறைக்கத் தொடங்கியுள்ளன. சில நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யவும் திட்டமிட்டு வருகின்றன. சில நிறுவனங்கள் கடந்த ஆண்டினை காட்டிலும் பணியமர்த்தலை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளன.
சர்வதேச அளவில் மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்கள் கூட ரெசசன் பயத்தால் செலவினை குறைக்கவும், வளர்ச்சியினை குறையாமல் தக்க வைத்தும் கொள்ளும் நடவடிக்கையிலும் ஈடுபட தொடங்கியுள்ளன.
ரெசசன் அச்சம்
குறிப்பாக ஐடி துறையில் பணியமர்த்தலானது குறையலாமென்ற அச்சம் இருந்து வருகின்றது. அதற்கான சிக்னலே முதல் காலாண்டு முடிவுகளாகும். இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக பணவீக்கம், உக்ரைன் ரஷ்யா பிரச்சனையும் உள்ளன. ஏற்கனவே கொரோனாவால் பிரச்சனையை எதிர்கொண்ட நிறுவனங்கள், தற்போது ரெசசனாலும் அழுத்தத்தினை எதிர்கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் கூட அதிரடியான அறிவிப்பினை கொடுத்து வருகின்றன.
ஆல்பாஃபெட் இன்க்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாஃபெட் இன்க், இந்த ஆண்டில் தனது பணியமர்த்தலை மெதுவாக குறைக்க உள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். தற்போது அனைத்து நிறுவனங்களுமே பொருளாதார மந்த நிலை தலைவலிகளை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. ஆக பணியமர்த்தலை குறைப்பது நல்லது என கூறியுள்ளார்.
அமேசான்
சர்வதேச அளவில் மிகப் பெரிய இகாமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம், மீடிய அறிக்கையின் படி அதிகளவில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சில தினங்களுக்கு முன்பு வெளியான அறிக்கையின் படி, அதன் சில உள்கட்டமைப்பு பணிகளை கூட நிறுத்தி வைத்துள்ளதாகவும் அறிவித்தது. இது ஹைபிரிட் ஒர்க் மாடலுக்கு ஏற்ப திட்டமிட நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. அமேசான் டெக் உலகில் அதிக ஊழியர்களை கொண்டுள்ள நிறுவனங்களில் ஒன்றாகும்.
டெஸ்லா
ஜூன் மாத நடுப்பகுதியில் டெஸ்லா நிறுவனம், அதன் ஊழியர்களில் 10% பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியது. சமீபத்தில் 200 ஊழியர்களை டெஸ்லா பணி நீக்கம் செய்தது. இது அதன் ஆட்டோபைலட் டிவிஷனில் செய்யப்பட்டது. அதொடு கலிபோர்னியா அலுவலகத்தினையும் மூடியதாக கூறப்படுகிறது.
ஆப்பிள் இன்க்
நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனமும் அதன் பணியமர்த்தலை மெதுவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் செலவினங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மெட்டா
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா பிளார்ட்பார்ம் இன்க், அதன் பொறியாளர்கள் பணியமர்த்தலில் 30% குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக 10,000 பொறியாளர்களை பணியமர்த்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 6000 - 7000 பேரை மட்டுமே பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் கார்ப்
மைக்ரோசாப்ட் கார்ப் நிறுவனமும் அதன் பணியமர்த்தலை குறைக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அதன் விண்டோஸ், ஆபிஸ், டீம்ஸ் சாட் உள்ளிட்ட துறைகளில் பணியமர்த்தலை குறைக்க திட்டமிட்டுள்ளது.
ஸ்பாட்டிபை
ஸ்பாட்டிபை நிறுவனமும் அதன் ஊழியர்களுக்கு மெயில் மூலம், பணியமர்த்தலில் 25% குறைக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் தேவைக்கு ஏற்ப ஆடியோ சேவையில் பணியமர்த்தலை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.