இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட, கடந்த இரண்டு ஆண்டுகளில் 55 நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு இடையிலான கூட்டத்தில் பேசிய டாக்டர் சிங், 2022-23 ஆம் ஆண்டில் குறைந்தது மேலும் ஒன்பது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இதில் இணையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
55 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இப்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள 55 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 29 சாட்டிலைட் சார்ந்தவை, 10 விண்வெளி பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகள், 8 ராக்கெட் லாஞ்சர் மற்றும் இயந்திரங்கள், 8 ராக்கெட் தரை அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி பற்றியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் செயற்கைக்கோள்கள்
கூடுதலாக, இந்தியாவின் 75- வது ஆண்டு சுதந்திரத்தைக் குறிக்கும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் உடன் இணைந்து இந்த ஆண்டு 75 மாணவர்களின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
இஸ்ரோவில் இந்த பொதுத்துறை - தனியார் துறை கூட்டணி வந்த பிறகு நல்ல முன்னேற்றம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
தனியார் ராக்கெட் ஏவுதளம்
தனியார் நிறுவனங்களுக்கு என ஸ்ரீஹரி கோட்டாவில் தனியாக ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ அனுமதி அளித்துள்ளது. அங்கு இருந்து அனுப்பப்படும் ராக்கெட்களுக்கு கட்டணமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆலோசனைகள் மட்டும் அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும்.
டெஸ்லா, அமேசான்
அமெரிக்காவில் டெஸ்லாவின் ஸ்பேஸ் எக்ஸ், அமேசானின் ப்ளூ ஆரிஜின் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்வெளிக்குச் சுற்றுலா அனுப்புவது, குறைந்த செலவில் ராக்கெட் உற்பத்தி செய்வது போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர். அதே போன்று இந்தியாவிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.