இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் வர்த்தகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் வாயிலாகத் தான் இஸ்ரோ தனியார் மற்றும் பிற நாட்டுச் செயற்கைகோள்கை விண்ணில் செலுத்தும் பணிகளைச் செய்து வருகிறது.
சமீப காலமாக இஸ்ரோ விண்வெளி பயணத்தை மிகவும் மலிவான செலவில் செய்து வரும் காரணத்தால் இதைத் தனி வர்த்தகமாகவே துவங்கியுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட், இஸ்ரோ தயாரிக்கும் செயற்கைக்கோள் மட்டும் அல்லாமல் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் உருவாக்கும் செயற்கைக்கோள்களையும் விண்வெளியில் செலுத்தி வருகிறது.
புதிய ஒப்பந்தம்
நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் தற்போது புதிதாக 4 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தச் செயற்கைக்கோள் பூமியைக் கண்காணிக்கப் பயன்படுத்தும் செயற்கைக்கோள் ஆகும்.
மேலும் இந்த 4 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுகிறது.
PSLV மற்றும் SSLV ராக்கெட்கள்
தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள 4 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோவின் PSLV மற்றும் SSLV ராக்கெட்களைப் பயன்படுத்தி விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளதாக நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஜி.நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்ட புதிய வாடிக்கையாளர்களின் பெயரை வெளியிட மறுத்துவிட்டது.
பிரேசில் செயற்கைக்கோள்
சமீபத்தில் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் பிரேசில் நாட்டின் National Institute for Space Research (INPE) தயாரித்த அமேசானியன்-1 என்னும் பூமி கண்காணிப்புச் செயற்கைக்கோள்-ஐ பிப்ரவரி 28ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. அமேசானியன் -1 செயற்கைக்கோள் உடன் சுமார் 18 செயற்கைக்கோள் சேர்த்து PSLV-C51 ராக்கெட் மூலம் விண்ணில் பிப்ரவரி 28ஆம் தேதி செலுத்தியது.
நியூஸ்பேஸ் இந்தியா
நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 10 கோடி ரூபாய் Paid-up கேப்பிடல் மற்றும் 100 கோடி ரூபாய் ஒப்புதல் முதலீட்டு உடன் இயங்கி வருகிறது. இதேவேளையில் 2021-22ஆம் நிதியாண்டுக்கு நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கும் பணிகளை மேம்படுத்த 700 கோடி ரூபாய் விண்வெளி துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
10000 கோடி ரூபாய் முதலீடு
இதேவேளையில் நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத் தலைவர் கூறுகையில் அடுத்த 5 வருடத்தில் வருடம் 2,000 கோடி ரூபாய் வீதம் முதலீடு செய்து செயற்கைக்கோள், ராக்கெட், இயக்கும் ஆகியவற்றை மேம்படுத்தவும் இதன் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற திட்டமிட்டு உள்ளதாக நாராயணன் தெரிவித்துள்ளார்.