சென்னை: இந்திய ஐடி நிறுவனங்கள் சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை காரணமாகத் தனது வர்த்தகத்தில் சில மாற்றங்களை எதிர்கொண்டு வந்தாலும் தொடர்ந்து வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
ஆனால் லாப அளவில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருவதால் விப்ரோ, இன்போசிஸ் ஆகிய முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வேரியபிள் பே தொகையைக் குறைத்துள்ளது. இதில் விப்ரோ பெரும் பகுதி ஊழியர்களுக்கு மொத்தமாக ரத்து செய்துள்ளது.
முன்னணி நிறுவனங்களின் இந்த முடிவால் ஐடி ஊழியர்கள் மீண்டும் தனது வேலையைக் காட்ட துவங்கியுள்ளனர்.
200 பில்லியன் டாலர்
இந்தியாவில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான மென்பொருள் சேவை ஏற்றுமதி துறையில் விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களின் முடிவு, ஐடி ஊழியர்கள் பலரை வேறு வேலைக்குத் தேட தூண்டும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
ஐடி துறை
இந்திய ஐடி துறையில் ஏற்கனவே ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் அதிகமாக இருக்கும் நிலையில் வேரியபிள் பே குறைப்பு என்பது புதிய வேலைவாய்ப்புகளைத் தேட காத்திருக்கும் ஐடி ஊழியர்களை வேகப்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
கிரேட் ரெசிக்னேஷன்
இதனால் மீண்டும் இந்தியா ஐடி துறையில் கிரேட் ரெசிக்னேஷன் வருவது மட்டும் அல்லாமல் அட்ரிஷன் விகிதத்தைக் கூடுதலாக அதிகரிக்கத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல் சந்தையில் முன்பை போல் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கணிசமான வேலைவாய்ப்புகள் உள்ளது, இது ஊழியர்கள் ராஜினாமா செய்ய வாய்ப்புகள் உள்ளது.
விப்ரோ நிறுவனம்
இந்திய ஐடி துறையில் வேரியபிள் பே தொகையைக் குறைக்க வேண்டும் என முதலில் முடிவு செய்தது விப்ரோ நிறுவனம் தான். விப்ரோ தனது நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு வேரியபிள் பே தொகை முழுவதும் ரத்து செய்வதாகவும், புதிய மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 30 சதவீதம் குறைக்கப்பட்டு 70 சதவீத தொகையை மட்டும் அளிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது.
இன்போசிஸ்
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ், ஜூன் காலாண்டுக்கான ஊழியர்களின் சராசரி வேரியபிள் பே ஊதியத்தை 70 சதவீதமாகக் குறைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
டிசிஎஸ் நிறுவனம் சில ஊழியர்களுக்குக் காலாண்டு வேரியபிள் பே தொகை ஒரு மாத தாமதத்திற்குப் பின்பு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் யாருக்கும் வேரியபிள் பே தொகை கட் செய்யப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.