டெல்லி: ஒரு காலத்தில் ஐடி துறை என்றாலே, வாரத்தில் ஐந்து நாள் வேலை, சொகுசான பயணம், அலைச்சல் இல்லை, கடிமான உடல் உழைப்பு இல்லை, எல்லாவற்றையும் விட அதிக சம்பளம் என பல சலுகைகள் என்பது தான் பலருக்கும் நியாபகம் வரும்.
ஆனால் இதன் ஒரு பக்கத்தினை பார்த்த மக்களுக்கு, அவ்வப்போது எட்டு பார்க்கும் பணி நீக்கம், சம்பள குறைப்பு, இதெல்லாவற்றையும் விட வாரத்தில் 5 நாட்கள் தான் வேலை 2 நாள்கள் விடுமுறை என்றாலும், அதற்கும் சேர்த்து வேலை வாங்கும் நிலை இருந்து வருகிறது.
இதனால் சமீப காலமாகவே ஐடி துறையில் உள்ள மோகம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் இதற்கு பல காரணங்கள் உண்டு.
இந்திய ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பு
தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெரிக் கட்டிக் கொள்ளும் என்பது ஐடி துறைக்கு நன்றாகவே பொருந்தும், ஏனெனில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரச்சனை என்றாலும், மறுபுறம் அதனால் இங்கு அதிகம் பாதிக்கப்படுவதும் நம்மூர் ஐடி ஊழியர்கள் தான். இதைத் போலத் தான் தற்போது கொரோனாவினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதும், பாதிக்கப்பட்டு வருவதும் இந்திய ஐடி ஊழியர்கள் தான்.
சம்பள குறைப்பு & பணி நீக்கம்
ஒரு புறம் கொரோனாவால் சம்பள குறைப்பு, ஊதிய உயர்வு, புதிய பணியமர்த்தல் என்பதும் தற்போதைக்கு இல்லை என்று கூறி வருகின்றன. இதற்கிடையில் சில நிறுவனங்கள் பணி நீக்கம் என அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் ஏற்கனவே பலர் வேலையிழந்துள்ளனர்.
தொழிலாளர் சட்டங்களை தளர்த்துங்கள்
இதற்கிடையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஐடி நிறுவனங்கள் கடுமையான வீழ்ச்சியினை கண்டு வருகின்றன. உலகளாவிய வாடிக்கையாளர்களை நம்பியுள்ள இந்த நிறுவனங்கள், இந்திய தகவல் தொழில் நுட்ப துறைக்கும், அதாவது சேவைத் துறைக்கு தொழிலாளர் சட்டங்களை தளர்த்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல கோரிக்கை
இது குறித்து நாஸ்காம் மற்றும் ஐடி நிறுவனங்கள், அதிகப்படியாக உள்ள ஊழியர்களை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும். அதோடு தினசரி மற்றும் வாராந்திர வேலை நேர வரம்புகளை தளர்த்துவது குறித்தும், பெண்களை வீட்டில் இருந்தே இரவு பணி புரிய அனுமதிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தொழிலாளர் சட்டத்தில் தளர்வு
ஏற்கனவே கொரோனாவால் பொருளாதார ரீதியிலாக பின்னடைவை சந்தித்துள்ள பெரு நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், இந்த நடவடிக்கையினால், சற்று செலவினை குறைக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த வாரத்தில் நாஸ்காம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் இந்த மாநிலங்கள் தொழில் துறை மற்றும் உற்பத்தியாளர்களுக்கும் தொழிலாளர் சட்டங்களில் இருந்து சற்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் எந்த மாதிரியான தளர்வுகள் என்று குறிப்பிடப்படவில்லை.
பல நிறுவனங்களுக்கு நன்மை
ஆனால் இதில் உள்ள கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் நான்கு மாநிலங்களில் நிறுவனங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றின் மூலம் ஐடி மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு எந்த தளர்வும் இல்லை என்றும் கூறப்படுகிறது. தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் ஜென்பாக்ட் போன்ற நிறுவனங்களுக்கும் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக விரைவில் இந்த தொழிலாளர் சட்டத்தில் ஐடி துறைக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டால் இன்னும் பலர் வேலை பறிபோகவே வாய்ப்புள்ளது.