இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான ஐடி துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிகப்படியான வர்த்தகம் கிடைத்து வந்தாலும், அதிகப்படியான பிரச்சனைகளும் உருவாகியுள்ளது.
ஒருபக்கம் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டுத் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர், மறுபுறம் அதிகச் சம்பளத்தில் ஊழியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம், புதிய தொழில்நுட்பத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாமல் இருக்கும் காரணத்தால் ஊழியர்கள் தட்டுப்பாடு எனப் பல பிரச்சனைகளை உருவாகியுள்ளது.
திறன் மேம்பாடு
இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் வகையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஐடி மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தனது ஊழியர்களின் திறனை மேம்படுத்த learnings and development (L&D) பிரிவுக்கான பட்ஜெட்-ஐ அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
சாப்ட்ஸ்கில் இந்தியா
இதுகுறித்து சாப்ட்ஸ்கில் இந்தியா செய்த ஆய்வில் பெரும்பாலான நிறுவனங்கள் L&D பிரிவின் பட்ஜெட்-ஐ அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது என இந்நிறுவன ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இந்திய ஐடி துறை வேகமாக வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் புதிய தொழில்நுட்பத்தின் தேவையும் அதிகரித்துள்ளது.
ஐடி ஊழியர்கள்
இதனால் தற்போது இருக்கும் ஐடி ஊழியர்களுக்குப் புதிய தொழில்நுட்பத்தில் குறிப்பாகப் புதிதாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிப்பதன் மூலம் போதுமான திறன் வாய்ந்த ஊழியர்களை உருவாக்குவது மட்டும் அல்லாமல் நிறுவனத்தில் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என ஐடி நிறுவனங்கள் நம்புகிறது.
பல துறைகள்
மேலும் டீம்லீஸ் நிறுவனம் செய்த ஆய்வில் ஐடி துறை மட்டும் அல்லாமல் ஈகாமர்ஸ், லாஜிஸ்டிக்ஸ், BFSI, பார்மா, இன்ஜினியரிங் மற்றும் கல்வி ஆகிய துறை சார்ந்த நிறுவனங்களும் L&D பிரிவுக்கு அதிகப்படியான தொகையைச் செலவு செய்ய முடிவு செய்துள்ளது.
ஆதிக்கம்
இந்தியாவில் அனைத்து துறையிலும் புதிய தொழில்நுட்பம் சேவைகள் வளர்ந்து வருகிறது. சந்தையில் தொடர்ந்து வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்ற காரணத்தாலும், வர்த்தகச் சந்தையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தாலும் ஊழியர்களுக்குப் புதிய பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாடுகளை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் உள்ளது.
ஊழியர்கள் சுமை
இதேபோல் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளாத ஊழியர்கள், நிறுவனங்களுக்குத் தேவையற்ற சுமையாக மாறியுள்ளனர் என்றால் மிகையில்லை. இந்தப் பரிமாண வளர்ச்சியில் ஊழியர்கள் அனைவரும் எதிர்காலச் சந்தைக்குத் தேவைப்படும் திறனைக் கட்டாயம் வளர்த்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் போட்டியைச் சமாளிக்க முடியாது.