நாட்டில் நிலவி மந்த நிலையில் அனைத்து துறைகளும் சரிவின் விளிம்பில் தான் இருந்து வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் சற்றே ஆறுதல் தரும் விதமாக தகவல் தொழில்நுட்ப துறை இருந்தது என்றே கூறலாம்.
ஏனெனில் அந்தளவுக்கு ஐடி துறையில் தாக்கம் இல்லை என்றே நம்பப்பட்டது. ஆனால் வெளிதோற்றத்தை நம்பி எதையும் கூற முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது.
சமீபத்தில் வெளிவந்த அறிக்கை ஒன்றில் ஐடி நிறுவனங்களின் பங்கு விலையானது கடந்த ஒரு ஆண்டாக அவ்வளவாக மாற்றம் காணவில்லை என்று கூறியுள்ளது.
வளர்ச்சி இல்லை
இந்த மாற்றமின்மைக்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி இன்றல்ல நேற்றல்ல கடந்த மூன்று காலாண்டுகளாக தொடர்ந்து அடி வாங்கி வருகிறது. இரண்டாவது மத்திய அரசு செப்டம்பரில் அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பில் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்பது தான்.
சிறந்த உதாரணம்
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் நாட்டின் மிகச்சிறந்த நிறுவனமான டிசிஎஸ்(டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) தான். ஏனெனில் இதன் நிலையான நாணய மதிப்பிலான அடிப்படையில் ஜனவரி - மார்ச் காலாண்டில் வளர்ச்சி 12.7 சதவிகிதமாக இருந்துள்ளது. எனினும் இந்த வளர்ச்சியானது அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 6.8% ஆக குறையலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
நம்பிக்கையின் பேரில் ஏற்றம்
நிறுவனத்தின் வளர்ச்சி குன்றிய போதும், நிறுவனத்தின் பேரில் உள்ள நம்பிக்கையின்பால் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த 12 மாதங்களில் 22.5% ஆக ஏற்றம் கண்டு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டது. ஆக இந்த நிறுவனத்தின் தரமான பெயரால் மட்டுமே பங்கு சந்தையில் வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால் வளர்ச்சியை பொறுத்து அல்ல என்பது இதில் தெளிவாகிறது.
இன்ஃபோசிஸ் சிறப்பு
டிசிஎஸ் நிறுவனத்திற்கு போட்டி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் சமீபத்திய காலாண்டுகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஜனவரி - மார்ச் காலாண்டில் இதன் வளர்ச்சி 11.7% ஆக இருந்தது. ஆனால் டிசம்பர் காலாண்டில் 9%மாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்ஃபோசிஸ் பங்குகள் கடந்த ஆண்டில் 5% மட்டுமே ஏற்றம் கண்டுள்ளன.
இன்ஃபோசிஸ் மீது புகார்
கடந்த ஆண்டில் இன்ஃபோசிஸ் மீது தொடர்ந்து பல புகார்கள் வந்ததையடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது, குறைந்த அளவே ஏற்றம் கண்டுள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த நிறுவனம் தன் மீது தவறு இல்லை என்று நிரூபித்தால் வளர்ச்சி காணலாம் என்றும் கூறப்படுகிறது.
வளர்ச்சி குறையும்
இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனை என்றாலும், டிசம்பர் காலண்டில் நிலவி வரும் மந்த நிலையால் வளர்ச்சி குறையலாம் என்றும் கருதப்படுகிறது. வங்கி மற்றும் நிதிச் சேவைகளில் மந்தமான நிலை இருப்பதால் வளர்ச்சியில் மிதமான தன்மையே இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
நோமுரா மதிப்பீடு
நோமுரா நிதி ஆலோசனை நிறுவனம், இந்தியாவில் டயர்1ல் உள்ள ஐடி நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி 8.6% ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் 10.1% மாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவின் டாப் 4 ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி 7%மாக மட்டுமே இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
லாபம் குறையும்
இதனால் இந்த நிறுவனங்களின் லாப வரம்புகள் தொடர்ந்து அழுத்தத்திலேயே இருக்கலாம். மேலும் வருவாய் வளர்ச்சி மற்றும் மார்ஜின்கள் குறைந்து வருவதால் லாபம் என்பது மிக பலவீனமாகவே இருக்கும் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. ஆக மொத்தம் டிசம்பர் காலாண்டு ஐடி நிறுவனங்களுக்கு மிக கொடிய காலாண்டாக இருந்துள்ளது.