ஊரே வெளுத்து எடுத்தது போல இருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லை, காரணம் கொரோனா வைரஸ் லாக் டவுன்.
இந்த லாக் டவுன் கால கட்டத்தில், ஐடி கம்பெனிகள் தங்கள் ஊழியர்களிடம் வேலையும் வாங்க முடியாமல், லே ஆஃப்-ம் செய்ய முடியாமல் தவித்தார்கள்.
இப்போது சீன ப்ராஜெக்ட்களில் வேலை பார்க்கும் ஐடி கம்பெனிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது.
சீன ப்ராஜெக்ட்
ஐடி நிறுவனங்கள், யார் எல்லாம் சீனாவில் வியாபாரம் பார்க்கிறார்களோ (சீன ப்ராஜெக்ட்களில் வேலை பார்க்கிறார்களோ) அந்த கம்பெனிகள் எல்லாம் மீண்டும் செயல்படத் தொடங்கி இருக்கின்றன. அது எப்படி சாத்தியம், உலகமே லாக் டவுனில் இருக்கிறதே? என்று கேட்கிறீர்களா.
சீன லாக் டவுன்
சீனாவில் தான் கொரோனா வைரஸ், மிகப் பெரிய அளவில் பரவியது. எனவே, சீனாவில் தான் பெரிய அளவில் லாக் டவுன் எல்லாம் அறிவித்தார்கள். ஜனவரி மாத கடைசியிலேயே லாக் டவுனை தீவிரமாக கடை பிடிக்கத் தொடங்கினார்கள். இந்த லாக் டவுன் கடந்த வாரம் வரை நீடித்தது.
வேலை காலி
இந்த கால கட்டத்தில், சீன ப்ராஜெக்ட்களில் வேலை பார்த்த ஐடி கம்பெனிகள் எல்லாம், வேலை இல்லாமல் தவித்தார்கள். இப்போது அங்கே லாக் டவுன் நீக்கப்பட்டு இருப்பதால், மீண்டும் வழக்கம் போல வேலை கலை கட்டத் தொடங்கி இருக்கிறது. எனவே தான், சீன ப்ராஜெக்ட்களில் வேலை பார்க்கும் ஐடி கம்பெனிகள் குஷியாகி இருக்கிறார்கள்.
நாஸ்காம் தரப்பு
கொரோனா நேரத்தில் ஐடி கம்பெனிகள் இயங்கினாலும்... சமூக விலகலை கடை பிடிப்பது, தானாகவே உடல் வெப்ப நிலையை கணிக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட எண்ட்ரி கேட்கள், அடிக்கடி சானிட்டைசர்களை பயன்படுத்துவது, மதிய உணவுகளை வழங்குவது, லைசன்ஸ் பெற்ற கேண்டீன்கள் மட்டுமே உணவு வழக்குவது... என பல முன் ஏற்பாடுகளைச் செய்து இருப்பதாகச் சொல்கிறது நாஸ்கம் தரப்பு.
வீட்டில் இருந்து வேலை
இன்னமும் கூட, வீட்டில் இருந்தே ஒருவர் தன் வேலையைச் செய்ய முடியும் என்றால், ஐடி கம்பெனிகள், அவர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கச் சொல்கிறார்களாம். இந்த நடைமுறை இன்னும் சில காலங்களுக்கு தொடரும் எனவும் சொல்லி இருக்கிறது ஐடி மற்றும் ஐடி சார்ந்த நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம்.
உதாரணம்
டெக் மஹிந்திரா ஐடி நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக சீனாவில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. சுமாராக 2,000 ப்ராஜெக்ட்களில் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் அலுவலகங்கள் செயல்படத் தொடங்கி இருக்கிறதாம். ஐடி கம்பெனிகள் மீண்டும் மெல்ல செயல்படத் தொடங்குவது போல, மற்றவைகளும் செயல்படத் தொடங்கினால் நன்றாக இருக்கும்.