கொரோனாவின் கோரப்பிடிக்கு மத்தியில் ஐடி துறையில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கிடையில் தற்போது பல நிறுவனங்களும் ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்று நிலையை ஏற்படுத்தி வருகின்றன.
முன்னணி சாப்ட்வேர் வணிக நிறுவனமான சாப் (SAP) நிறுவனம், தனது 1 லட்சம் ஊழியர்கள், சர்வதேச அளவில் பிளெக்ஸி முறையில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளது.
இது உண்மையில் ஐடி ஊழியர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணி புரியலாம் என்ற நிலை ஏற்பட்டது.
பிளெக்ஸி பணியமர்த்தல் பற்றிய ஆய்வு
பல நிறுவனங்களும் கொரோனாவுக்கு பின்பும் இதனை செயல்படுத்தலாம் என்றும் கூறி வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து சாப் நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 94% பேர் அதிகமானோர் பிளெக்ஸி முறையில் பணிபுரிவதையே விரும்புகின்றனர். எனினும் கிட்டதட்ட பாதிபேர் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களாகவது அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம்
அந்த வகையில் சாப் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு 100% பிளெக்ஸிபிள் முறையை அளித்துள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி ஜூலியா வைட் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதனால் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும். அல்லது அலுவலகத்தில் இருந்தும் பணியாற்ற முடியும். இது ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வுத் தன்மையை கொடுக்கும்.
அலுவலகத்தினை மறு வடிவமைக்கும்
இதற்கிடையில் நிறுவனம் குழுப்பணிக்காக அதிக இடமுள்ள வகையில், அலுவலகத்தினை மறுவடிவமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் ஊழியர்களை பாதுகாக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தினை, பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுத்த அனுமதித்துள்ளன. தற்போது அந்த பட்டியலில் சாப் நிறுவனமும் இணைந்துள்ளது.
கலப்பு வேலை மாதிரி
ஐடி துறையில் பரவி வரும் இந்த பிளெக்ஸி கலாச்சாரம், ஊழியர்களுக்கு உண்மையில் ஒரு நெகிழ்வுத் தன்மையை கொடுக்கும். இந்தியாவிலும் கடந்த ஆண்டில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா காரணமாக இது குறித்தான அறிவிப்புகள் இதுவரையில் இல்லை. எனினும் இந்த கலாச்சாரம் ஒரு கலப்பு வேலை மாதிரி திட்டத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் அப்போதே நாஸ்காம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.