தமிழ்நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றாக விளங்கும் செட்டிநாடு குரூப் சிமெண்ட், மின்சாரம், உற்பத்தி, போக்குவரத்து, கட்டுமானம், கல்வி, மருத்துவம், லாஜிஸ்டிக்ஸ் எனப் பல துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்நிலையில் வருமான வரித்துறையினர் செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாகச் சென்னை, திருச்சி, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் சுமார் 60 இடங்களில் நடத்திய சோதனையில் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான வருமானத்திற்கு வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதாகக் கண்டுபிடித்து மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் வைப்பு நிதி
இந்த அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத 23 கோடி ரூபாய் ரொக்க பணம், கணக்கில் காட்டப்படாத 110 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டில் செய்யப்பட்ட வைப்பு நிதிக்கான பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மிகைப்படுத்தப்பட்ட கணக்குகள்
செட்டிநாடு குழுமம் லாபத்தைக் குறைத்து வருமான வரி அளவை குறைக்கத் திட்டமிட்டு இக்குழும நிறுவனங்கள் அதிகப்படியான செலவுகளைக் குறிப்பிட்டு மோசடி செய்துள்ளதையும் வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கணக்கில் சுமார் 435 கோடி ரூபாய் மதிப்பிலான தொகைக்கு மிகைப்படுத்தப்பட்ட கணக்குகள் இந்த அதிரடி சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
400 வருமான வரித்துறை அதிகாரிகள்
சென்னை, திருச்சி, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இருக்கும் செட்டிநாட்டுக் குழுமத்திற்குச் சொந்தமான 60 இடங்களில் சோதனை செய்யச் சுமார் 400 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
3 துறைமுகம்
இதேபோல் இந்தச் சோதனையில் நாட்டின் 3 துறைமுகத்தில் செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமாக இருக்கும் சொத்துக்களை மற்றொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட உண்மையான நிதி பரிவர்த்தனை தரவுகளையும் வருமான வரித்துறை கண்டு பிடித்துள்ளனர்.
கேப்பிடல் கெயின்ஸ்
இந்தச் சொத்து விற்பனையில் ஏற்படும் கேப்பிடல் கெயின்ஸ் குறைக்க வேண்டும் எனப் போலியான குழப்பம் நிறைந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் உண்மையான கேப்பிடல் கெயின்ஸ் மதிப்பு 280 கோடி ரூபாய் எனவும் வருமான வரித்துறை கணக்கிட்டுள்ளது.
லாக்கர் மற்றும் பணப் பரிமாற்றம்
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இந்நிறுவனத்திற்குச் சொந்தமான பல லாக்கர்களும், குழும நிறுவனங்களுக்கு மத்தியில் செய்யப்பட்ட அதிகளவிலான நிதி மாற்றங்களையும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவக் கல்லூரி
வருமான வரித்துறை சோதனைகளை முடித்துவிட்ட நிலையில் தற்போது விசாரணையைத் துவங்கியுள்ளது. மேலும் செட்டிநாடு குழுமத்தின் மருத்துக் கல்லூரிகளில் மருத்து சீட்டு சேர்க்கைக்காக கேப்பிடேஷன் பீஸ் பெறப்பட்டு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.