இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கியமான வர்த்தகத் துறைகளில் ஒன்றாக இருக்கும் ஐடி சேவை துறையின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் 2023ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மந்தமான துவக்கத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
ஜூன் காலாண்டில் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை தொடர்ந்து லாபத்தில் சரிவை சந்தித்துள்ளது. இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாக ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்பட்ட உயர்வு மற்றும் பயணச் செலவுகளைக் காரணம் காட்டியது.
ஆனால் உண்மையில் ஐடி நிறுவனங்களின் வருவாய் குறைந்ததற்கு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பளம் காரணம் இல்லை, ஐடி நிறுவனங்களின் அட்ரிஷன் விதிதம் தான் காரணமாக உள்ளது.
ஐடி நிறுவனங்கள்
2022ஆம் நிதியாண்டில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டுமே 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைச் செலவு செய்துள்ளது. இது இந்த ஐடி நிறுவனங்களின் மொத்த வருவாயில் 62 சதவீதமாகும்.
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ
இதில் முக்கியமாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை சம்பளத்திற்காக மட்டுமே தனது மொத்த வருவாயில் 53-55 சதவீதம் வரையிலான தொகையைச் செலவு செய்கிறது. இதேபோல் நடுத்தர ஐடி சேவை நிறுவனங்களான எல் அண்ட் டி இன்போடெக் மற்றும் Mindtree ஆகியவை 60-53 சதவீதம் வரையிலான வருமானத்தைச் சம்பளத்திற்காகச் செலவு செய்கிறது.
அட்ரிஷன் பிரச்சனை
இந்திய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் அதிகப்படியான தொகையைச் செலவு செய்ய முக்கியமான காரணம், தத்தம் ஐடி நிறுவனத்தால் தங்களது ஊழியர்களைத் தக்கவைக்க முடியாமல் போனது தான் பெரும் பிரச்சனை.
வெளியேறும் விகிதம்
டாப் ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் வெளியேறும் விகிதம் மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் ஐடி நிறுவனங்கள் வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்த போதுமான ஊழியர்கள் தேவை என்பதால் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் அமர்த்தியது. அட்ரிஷன் விகிதம் குறைவாக இருந்திருந்தால் அதிகச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்காது.
டாப் 6 ஐடி நிறுவனங்கள்
இந்தியாவின் டாப் 6 ஐடி நிறுவனங்களின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 15 லட்சம், கடன் வருடம் இதன் எண்ணிக்கை 12.3 லட்சம் மட்டுமே. ஆகவே கடந்த ஒரு வருடத்தில் ஐடி நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
67,301 கோடி ரூபாய்
இதேபோல் 2023 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் மொத்த ஊழியர்களுக்கான சம்பள அளவு 67,301 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 55,796 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சம்பளத்திற்காகச் செலவு செய்யப்பட்ட தொகை ஒரு வருடத்தில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
சராசரி சம்பளம்
இதைத் தாண்டி ஐடி ஊழியர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் ஐடி சேவை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சராசரி சம்பளம் 4.54 லட்சத்தில் இருந்து ஜூன் காலாண்டில் 4.5 லட்சமாகக் குறைந்துள்ளது.
பணவீக்கம்
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஐடி ஊழியர்களின் சராசரி சம்பளத்தின் அளவு குறைந்துள்ளது பெரு கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் சராசரி சம்பளம் குறைய முக்கியக் காரணம் அதிகப்படியான பிரஷ்ஷர்களைச் சேர்த்துள்ளது தான்.