1 லட்சம் சம்பளம், ஆன்சைட் வேலை, வெளிநாட்டு பயணங்கள், பப், பார், பீசா, பாஸ்தா... இந்த வரிசையில் லே ஆஃப் வரை பல வார்த்தைகளை நம் இந்திய இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்ததில் ஐடி துறைக்கு ஒரு தனி இடம் உண்டு.
அப்படிப்பட்ட ஐடி துறை, இன்று இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால் ரத்தக் களரியில் இருக்கிறது.
அப்படி என்ன பிரச்சனியில் இருக்கிறது ஐடி துறை? ஊழியர்கள் என்ன சொல்கிறார்கள்? வாருங்கள் பார்ப்போம்.
லாக் டவுன்
கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகம் பரவி விடக் கூடாது என்கிற நோக்கில், மத்திய அரசு லாக்டவுன் அறிவித்தது. இந்த லாக் டவுனில் கொரோனா ஒழிந்ததா இல்லையா என்று கேட்டால் கொரோனா ஒழியவில்லை. மாறாக பல ஆயிரக் கணக்கான ஊழியர்களின் வேலைவாய்ப்புகள் தான் ஒழிந்தது. அமைப்பு சார்ந்த வேலை வாய்ப்புகளில் குறிப்பாக ஐடி மற்றும் ஐடி சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகம் அடி வாங்கி இருக்கின்றன.
என்ன பிரச்சனை
ஐடி, பிபிஓ மற்றும் ஐடி சார்ந்த மற்ற துறைகள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை லே ஆஃப் செய்ய இருப்பதாகச் சொல்வார்கள். இந்த வழக்கமான லே ஆஃபைத் தாண்டி, இந்த கொரோனாவால், கடந்த சில மாதங்களில், கொத்து கொத்தாக ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். அனுப்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
எப்படி செய்கிறார்கள்
சில கம்பெனிகளில், ஜூலை மாதம் வரை கட்டாயப்படுத்தி ஊழியர்களை, சம்பளம் இல்லாத விடுப்பில் இருக்கச் சொல்கிறார்களாம். பெஞ்சில் இருக்கும் ஊழியர்களின் கதி அதை விடக் கொடுமை. ஒரு பிரபல ஐடி கம்பெனியில் பெஞ்சில் இருப்பவர்களுக்கு இரண்டே வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
1. மூன்று மாத சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலையில் இருந்து வெளியேறுவது முதல் வாய்ப்பாம்.
ப்ராஜெக்ட் பிரச்சனை
இரண்டாவது வாய்ப்பு தான் மிகக் கொடூரமானது. ஒரு மாத காலம் வரை பெஞ்சில் உட்கார்ந்து இருந்து ப்ராஜெக்ட் கிடைக்கிறதா..? என பயத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். ஒரு மாத காலத்துக்குள் ப்ராஜெக்ட் கிடைக்கவில்லை என்றால் அதன் பிறகு எந்த நஷ்ட ஈடும் பெற்றுக் கொள்ளாமல், வேலையில் இருந்து வெளியேற வேண்டும் என இரண்டே ஆப்ஷன் தான் கொடுத்து இருக்கிறார்களாம்.
நோ சம்பளம்
ஹெக்ஸாவேர் டெக்னாலஜீஸ் என்கிற கம்பெனியை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். இது இந்தியா பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நல்ல ஐடி கம்பெனிகளில் ஒன்று. இந்த கம்பெனி கூட, பெஞ்சில் இருக்கும் ஊழியர்களுக்கு மே, ஜூன், ஜூலை மாத சம்பளம் கொடுக்கப்படாது என வாய் வழியாகச் சொல்லி இருக்கிறார்களாம். ஜூலைக்கு மேல் பெஞ்சில் இருப்பவர்களை வேலையை விட்டு தூக்க இருக்கிறார்களாம்.
அலுவலகம் வாங்க
சென்னையைச் சேர்ந்த ஒரு நபர், பெங்களூரில் ஒரு பிரபல பன்னாட்டு ஐடி கம்பெனி அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இவர் லாக் டவுன் முன்பே சொந்த வேலை விஷயமாக சென்னைக்கு வந்துவிட்டார். மீண்டும் பெங்களூரு செல்ல முடியவில்லை. ஆனால் கம்பெனி, எப்படியாவது அலுவலகம் வந்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்திக் கொண்டு இருக்கிறார்களாம்.
சொந்த லேப்டாப்
அந்த சென்னை இளைஞர், ஏப்ரல் 17 வரை தன் சொந்த லேப்டாப்பிலேயே அலுவலக வேலைகளை எல்லாம் செய்தார்களாம். அதன் பின் சொந்த லேப்டாப்பில் வேலை செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது அவரால் பெங்களூருக்கு வர முடியவில்லை. எனவே எந்த ஒரு வேலையும் கொடுக்கப்படாமல், கட்டாய விடுப்பு எடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். விடுப்பு தீர்ந்தால் Loss of Pay எடுக்கச் சொல்லி இருக்கிறார்களாம்.
பாதிக்கப்படவில்லை
கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்தில், மற்ற எல்லா துறைகளோடு ஒப்பிடும் போது, ஐடி மற்றும் ஐடி சார்ந்த கம்பெனிகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படவில்லை. பிர்லா சாஃப்ட் கம்பெனி அதற்கு ஒரு உதாரணம் என சுட்டிக் காட்டுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் வலை தளத்தில் வெளியாகி இருக்கும் செய்தி.
96 % ஊழியர்கள்
இந்த பிர்லா சாஃப்ட் கம்பெனியில் 96 % ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருவதாக அந்த கம்பெனியின் முதன்மை டெலிவரி அதிகாரி (CDO) ஸ்ரீ ரங்கநாத் குல்கர்னியே சொல்கிறார். அதோடு வழக்கம் போல எல்லா சேவைகளையும் செய்ய முடிவதாகவும் சொல்லி இருக்கிறார்.
ஆனாலும் லே ஆஃப் ஏன்?
ஆக, ஐடி கம்பெனிகளால், கொரோனா லாக் டவுன் காலத்திலும், ஊழியர்களிடம் இருந்து வேலை வாங்க முடிகிறது. உண்மையாகவே கம்பெனிகள் கையில் ப்ராஜெக்ட் இல்லை, உபரியாக ஆட்கள் இருக்கிறார்கள் என்கிற பட்சத்தில் சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மட்டும் செய்து ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளலாமே.
அழுத்தம் வேண்டாமே
இந்த நெருக்கடியான காலத்திலும், 3 பேர் செய்ய வேண்டிய வேலையை இருவரைக் கொண்டு செய்விப்பது, மறு பக்கம் வேலை இல்லை எனச் சொல்லி லே ஆஃப் செய்வது, கட்டாய விடுப்பு எடுக்க வைப்பது, சம்பளம் கொடுக்காமல் இருப்பது போன்ற ஈவு இரக்கமற்ற நடவடிக்கைகள் ஏன்? இந்த பிரச்சனையை வெறுமனே அரசு சட்டம் இயற்றி தீர்க்க முடியாது. கம்பெனிகள் தான் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செயல்பட வேண்டும். கம்பெனிகள் ஊழியர்கள் உணர்வை புரிந்து கொள்ளும் என நம்புவோம்.