இந்திய ஐடி துறையில் பல நிறுவனங்கள் 6 மாதத்திற்குள் தங்களது ஊழியர்களுக்கு 2வது முறையாகச் சம்பள உயர்வு, பதவி உயர்வை அளித்து வருகிறது. 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக் காரணமாக வர்த்தகம் மற்றும் வருவாயில் ஏற்பட்ட பாதிப்புகளைக் காரணம் காட்டி ஐடி நிறுவனங்கள் சம்பள உயர்வைத் தள்ளி வைத்தது.
ஆனால் இதே கொரோனா காலத்தில் ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான ஆட்டோமேஷன் வர்த்தகத்தை இந்தியாவில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் பெற துவங்கியது, மேலும் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற முடியும் என்பதால் ஐடி நிறுவனங்கள் சில வாரங்கள் மட்டுமே வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டது.
இதனால் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அளிக்க வேண்டிய சம்பள உயர்வை டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் அளித்தது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் காரணத்தால் நடப்பு நிதியாண்டுக்கான சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்க ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ள காரணத்தால், 6 மாதத்திற்குள் இந்திய ஐடி ஊழியர்கள் 2வது முறையாகச் சம்பள உயர்வு பெறும் நிலை உருவாகியுள்ளது.
திறன் வாய்ந்த ஊழியர்களுக்குப் பற்றாக்குறை
இதேவேளையில் தற்போது ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை வெளிநாட்டில் இருந்து பெற்றுள்ள காரணத்தால், புதிய வர்த்தகத்தைக் கையாள திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான பற்றாக்குறை அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்தப் பற்றாக்குறையைத் தீர்க்க சக போட்டி நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களைக் கைப்பற்றும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
ஐடி ஊழியர்கள் வெளியேறும் விகிதம்
இதனால் ஐடி நிறுவனங்கள் கண்மூடித்தனமாகச் சம்பள உயர்வு அளித்துத் திறன் வாய்ந்த ஊழியர்களைப் பெற்று வருகிறது. இதனால் ஐடி நிறுவனங்கள் மத்தியில் ஊழியர்கள் வெளியேறும் விகிதம் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதைக் கட்டாயம் கட்டுப்படுத்தியாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிகளவிலான சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு என வாரி வழங்கி வருகிறது.
ஐடி ஊழியர்களுக்குப் பொற்காலம்
சொல்லப்போனால் இது ஐடி ஊழியர்களுக்கான பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும், 6 மாதத்தில் 2வது முறையாகச் சம்பள உயர்வு, பலருக்குப் பதவி உயர்வு, திறன் வாய்ந்த ஊழியர்களுக்குப் போனஸ். இதில் எதுவும் கிடைக்காத ஊழியர்களுக்கு வேறு நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு எனச் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
அக்சென்சர் சம்பள உயர்வு
இந்தியாவில் மட்டும் சுமார் 2 லட்சம் ஊழியர்களை வைத்துள்ள அக்சென்சர் டிசம்பர் மாதம் தனது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் ஆகியவற்றை அளித்த நிலையில் பிப்ரவரி மாதம் மீண்டும் நடப்பு நிதியாண்டுக்கான அப்ரைசல் பணிகளைத் துவங்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஏப்ரல் மாதம் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு முறை மட்டும் அளிக்கப்படும் 'Thank You Bonus' வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இன்போசிஸ் சம்பள உயர்வு
நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் ஜனவரி மாதத்தில் கடந்த நிதியாண்டுக்கான சம்பள உயர்வை அளித்த நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான சம்பள உயர்வை அளிக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இந்நிலையில் ஜூலை மாதம் இன்போசிஸ் ஊழியர்கள் நடப்பு நிதியாண்டுக்கான சம்பளத்தைப் பெற உள்ளனர்.
டிசிஎஸ் சம்பள உயர்வு
இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ள ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ், வெறும் 6 மாத இடைவேளையில் 2வது முறை சம்பள உயர்வை அளித்து வருகிறது. மேலும் பல உயர் அதிகாரிகளுக்கு 6 முதல் 8 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இது எப்போதும் அளிக்கப்படும் அளவீட்டை விடவும் அதிகமானது.
விப்ரோ சம்பள உயர்வு
புதிய சிஇஓ தலைமையிலான விப்ரோ வருகிற ஜூன் மாதத்தில் நடப்பு நிதியாண்டுக்கான சம்பள உயர்வைத் தனது ஊழியர்களுக்கு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. Thierry தலைமையிலான விப்ரோ அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறுவது மட்டும் அல்லாமல் வேகமாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஹெச்சிஎல் சம்பள உயர்வு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பல உதவிகளைச் செய்து வரும் வேளையிலும், ஜூன் மாதம் அனைத்து ஊழியர்களுக்குமான சம்பள உயர்வை அளிக்க உள்ளது. கடந்த ஆண்டுச் சராசரியாக 7-8 சதவீத சம்பள உயர்வை கொடுத்தது ஹெச்சிஎல்.
டெக் மஹிந்திரா சம்பள உயர்வு
மந்தமான மார்ச் காலாண்டு முடிவுகளை அறிவித்த டெக் மஹிந்திரா நிறுவனமும் தனது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு, போனஸ், பதவி உயர்வு எனப் பலவற்றையும் வாரி வழங்கி வருகிறது.