இந்திய ஐடி துறை நாளுக்கு நாள் வலிமை அடைந்து வருவது மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருந்து அதிகளவிலான வர்த்தக ஒப்பந்தங்களைப் பெற்று வருகிறது. சமீப காலமாகப் உலக நாடுகளின் பல முன்னணி நிறுவனங்கள் ஐடி சேவை, ஐடி மேம்பாடு ஆகியவற்றுக்கு இந்திய நிறுவனங்களையே அதிகளவில் தேடுகிறது.
இப்படியிருக்கும் போது ஐடி ஊழியர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை அசால்ட் ஆகத் தூக்கிப்போட்டு வருவதும், இது புதிய டிரெண்டாகியுள்ளாதாகவும், ஐடி நிறுவனங்கள் முதல் வேலைவாய்ப்பு அமைப்புகள் வரை கவலை அடைந்து வருகிறது.
உண்மையில் ஐடி துறையில் என்ன நடக்கிறது..? ஐடி ஊழியர்களை வேலைவாய்ப்புகளைத் தூக்கிப்போட என்ன காரணம்..?
கொரோனா மாற்றம்
2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுக் காரணமாக ஊழியர்கள் இல்லாமல் வர்த்தகத்தைச் செய்ய முடியாமல் பல நிறுவனங்கள் தவித்து வந்த நிலையில் ஆட்டோமேஷன் திட்டத்தைத் தீவிரமாகக் கையில் எடுத்த காரணத்தால் உலக நாடுகளில் இருந்து அதிகளவிலான பிராஜெக்ட்களை இந்திய ஐடி நிறுவனங்கள் பெற்று.
வேலைவாய்ப்புக்குப் பஞ்சம் இல்லை
இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்திய ஐடி துறையில் அடுத்த சில வருடங்களுக்கு வேலைவாய்ப்புக்குப் பஞ்சம் இருக்காது எனக் கணிக்கப்பட்டது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் திறன் மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை வலைவீசித் தேடி வருகிறது, இந்தத் தேடுதல் வேட்டையில் ஐடி நிறுவனங்கள் புதிதாகப் பணியில் சேர்வோருக்கு அதிகளவிலான சம்பளத்தை அளித்து வருகிறது.
ஜோ பைடன் கொடுத்த இன்ப அதிர்ச்சி
இதேவேளையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கச் சந்தையின் போட்டி தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் வங்கி துறையில் இருந்து அனைத்து நுகர்வோர் துறையிலும் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளார். இந்த மாற்றத்திற்குத் தேவையான பணிகளைக் குறைந்த செலவில் செய்து முடிக்க அமெரிக்க நிறுவனங்களுக்கு இருக்கும் ஓரே தீர்வு இந்திய நிறுவனங்கள் தான்.
ஊழியர்கள் கைப்பற்றல்
ஏற்கனவே இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று ஊழியர்கள் இல்லாமல் சக போட்டி நிறுவனத்தின் ஊழியர்களை இழுத்து வரும் நிலையில், அமெரிக்கச் சந்தையில் தற்போது உருவாகியிருக்கும் புதிய வர்த்தகம் ஊழியர்களைக் கைப்பற்றும் போட்டியை மோசமாக்கியுள்ளது. இதன் வாயிலாகத் தற்போது இந்திய ஐடி சந்தையில் வேலைவாய்ப்பு சுனாமி அடித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
வேலைவாய்ப்பைத் தூக்கிப்போட்டும் ஊழியர்கள்
தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் திறன் வாய்ந்த மற்றும் தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் அதுவும் புதிய தொழில்நுட்பத்தில் அனுபவம் பெற்ற ஊழியர்களுக்குச் சம்பளத்தை வாரி வழங்குகிறது, இதேவேளையில் ஐடி ஊழியர்கள் கிடைக்கும் வேலைவாய்ப்பைத் தூக்கிப்போட்டும் வருகின்றனர்.
ஓரே நேரத்தில் ரெண்டு, மூன்று வேலை
புரியவில்லையா, ஐடி ஊழியர்கள் தற்போது ஒரு நிறுவனத்தில் 30 முதல் 40 சதவீதம் வரையிலான சம்பள உயர்வில் வேலையை வாங்கினால், அதை வைத்து அடுத்தொரு நிறுவனத்தில் புதிய வேலையின் சம்பளத்தை வைத்து மற்றொரு வேலையை வாங்கி வருகின்றனர். இதனால் ஏற்கனவே கிடைத்த வேலைவாய்ப்பைத் தூக்கிப்போடுகின்றனர்.
57 சதவீதம் ரத்து
இதனால் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை ரத்து செய்வதைத் தாண்டி தற்போது ஊழியர்கள் வேலைவாய்ப்பை ரத்து செய்து வருகின்றனர். இதனால் கோவிட்-க்கு முன்பு ஊழியர்கள் ரத்து செய்யும் வேலைவாய்ப்பின் அளவு 10-12 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 55 முதல் 57 சதவீதமாக உயர்ந்துள்ளது என வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
120% Retention போனஸ்
மேலும் ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து நிறுவனத்தில் தக்க வைத்துக்கொள் வேண்டும் என்பதற்காக Retention போனஸ் அல்லது Retention பேகேஜ் பெயரில் ஊழியர்களின் சம்பளத்தில் 60 சதவீதம் முதல் 120 சதவீதம் வரையில் அளிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு முன்பு இதன் அளவீடு 30-35 சதவீதம் வரையில் மட்டுமே இருந்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வேலை
இதேபோல் கொரோனா காரணமாகத் தற்போது ஐடி ஊழியர்கள் உலகம் முழுவதும் வீட்டில் இருந்த பணியாற்றும் காரணத்தால் புதிய தொழில்நுட்பத்தில் திறன் வாய்ந்த ஊழியர்கள் இந்தியாவில் இருந்துகொண்டே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஐடி நிறுவனங்களிடம் இருந்து வேலைவாய்ப்புகளைப் பெற துவங்கியுள்ளது.
ஏகப்பட்ட சம்பளம்
வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து சம்பளத்தைப் பெறு காரணத்தால் இந்திய நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளத்தை விடவும் மிகப்பெரிய அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் நீண்ட கால அடிப்படையில் வீட்டில் இருந்தே பணியாற்றவும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
பென்ஸ் கார், BMW பைக் பரிசு
இப்படி ஊழியர்கள் சகட்டு மேனிக்கு வெளியேறும் காரணத்தால் ஒருபக்கம் Retention போனஸ் ஆகவும், மறுபக்கம் பென்ஸ் கார், BMW பைக், ஆப்பிள் பொருட்கள் என ஊழியர்களுக்கு அதிகப்படியான சேவைகளையும், பொருட்களைப் பரிசாக வழங்க ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
அதிக டிமாண்ட் கொண்ட துறை
தற்போது இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் அதிகளவில் டிமாண்ட் இருக்கும் ஊழியர்களின் பட்டியல்: புல் ஸ்டாக் இன்ஜினியர், டேட்டா இன்ஜினியர், டேட்டே அனலிஸ்ட், பிரென்ட் எண்ட் இன்ஜினியர், டேட்டா சைனிடிஸ்ட், பேக்எண்ட் இன்ஜினியர்ஸ் ஆகியோருக்கு அதிகளவிலான டிமாண்ட் உள்ளது.
சப்ளை - டிமாண்ட் பிரச்சனை
இந்த நிலைக்கு மிக முக்கியக் காரணம் சப்ளை - டிமாண்ட் பிரச்சனை தான், இப்புதிய தொழில்நுட்பத்தில் அதிகளவிலான ஊழியர்கள் இருந்தால் கட்டாயம் இந்த நிலை இருக்காது. மேலே குறிப்பிட்ட துறைகளில் திறன் வாய்ந்த மற்றும் அனுபவம் பெற்ற ஊழியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் தான் இந்தப் பிரச்சனை எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இன்னும் 2 வருடம் மட்டும் தான்..
இதைச் சரி செய்ய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்குத் திறன் மேம்பாடு பயிற்சி மற்றும் பிரஷ்ஷர்களுக்குப் புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி அளித்து வருகிறது. இதனால் அடுத்த 2 முதல் 3 வருடத்தில் இந்தச் சப்ளை - டிமாண்ட் பிரச்சனை முடிக்கப்பட வேண்டும் என நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.