இந்திய ஐடி துறை அதிகளவிலான வெளிநாட்டு நிறுவனங்களின் திட்டங்களைப் பெற்று வேகமாக வளர்ந்து வரும் வேளையில் அதிகளவிலான ஊழியர்களை இந்த வருடம் வெளிநாடுகளுக்குக் குறிப்பாக அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க அரசு முக்கியமான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா மட்டும் ஒப்புதல் பெற்றால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய சுமை உருவாகும். பல ஐடி ஊழியர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும்.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவில் தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தும், லாபகரமாக இயங்கவும் மிக முக்கியக் காரணமாக இருப்பது ஹெச்1பி விசா என்றால் மிகையில்லை. இந்தியாவில் பணியாற்றும் ஐடி ஊழியர்களை ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியில் அமர்த்தி வருகிறது.
டொனால்டு டிரம்ப் - ஜோ பைடன்
டொனால்டு டிரம்ப் ஆட்சியில் ஹெச்1பி விசா மீது பல கட்டுப்பாடுகள், விதிமுறை மாற்றங்கள் எனப் பல அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஜோ பைடன் அனைத்தையும் அகற்றிய நிலையில் ஐடி ஊழியர்கள் பைடனை கொண்டாடினர். ஆனால் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹெச்1பி விசா கட்டணத்தை உயர்த்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றம்
தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மசோதாவில் ஹெச்1பி விசா பெடிஷன் சமர்ப்பிக்கச் சப்ளிமென்ட்ரி கட்டணமாகக் கூடுதலாக 500 டாலர் தொகையை விதிக்க வேண்டும் என மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஹெச்1பி விசா
இந்த ஒப்புதல் பெறும் பட்சத்தில் ஹெச்1பி விசா பெறுவது ரொம்பவும் காஸ்ட்லியாகிவிடும். இது மட்டும் அல்லாமல் பல குடியேற்ற திட்ட சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்த குறிப்பிடப்பட்டு உள்ளது. உதாரணமாகக் கிரீன் கார்டு வாங்குவதற்கு 800 டாலரும், F-1 அல்லது ஸ்டூடென்ட் விசா-விற்கு 250 டாலர் என்ற கூடுதல் கட்டணத்தை அறிவிக்கப்பட்டு உள்ளது.
லாட்டரி முறை
தகுதிவாய்ந்தவர்கள் அனைவருக்கும் ஹெச்1பி விசா அளிக்கப்படுகிறது, ஆனால் வருடாந்திர எண்ணிக்கை கட்டுப்பாட்டின் கீழ் லாட்டரி முறையில் அளிக்கப்படுகிறது. இந்த லாட்டரி முறையை எளிதாக வெல்ல வேண்டும் என்றால் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த பலர் விண்ணப்பம் செய்வதன் மூலம் அதிக விசா பெற முடியும்.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இந்த முறையைத் தான் இந்திய ஐடி நிறுவனங்கள் செய்கிறது, உதாரணமாக 100 பேர் அமெரிக்காவிற்குத் தேவையென்றால் 500 முதல் 600 பேருக்கு விசா விண்ணப்பம் செய்யப்படும். இதன் மூலம் கட்டாயம் 100 பேருக்கு வாய்ப்பு கிடைத்து விடும்.
ஐடி ஊழியர்களுக்குப் பாதிப்பு
ஆனால் தற்போது கட்டணம் உயர்த்தப்படும் நிலையில் ஹெச்1பி விசா விண்ணப்பம் செய்யப்படும் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் பல இந்திய ஐடி ஊழியர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும்.
சிறிய நிறுவனங்கள்
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிடும் சிறிய நிறுவனங்களுக்கு இது பெரும் சுமையாக இருக்கும். இதேவேளையில் பெரு நிறுவனங்களின் லாபத்தில் இந்தக் கட்டண உயர்வு பாதிக்கும்.